சென்னை: ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் இன்று நடக்கும் போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்கு சென்னை சூப்பர்கிங்ஸ் தகுதிபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டி டோணி தலைமையிலான சென்னை அணிக்கும், கில்கிறி்ஸ்டின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும் ஹைதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் இந்த ஆட்டத்தில் வென்றால்தான் அரையிறுதிக்கும் செல்லும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
நிடினி, கோனி, பாலாஜி, முரளிதரன் என திறமையான பௌலர்கள் இருப்பதால் சென்னை அணிக்கு பௌலிங் பற்றி கவலையில்லை. அதேநேரத்தில் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பார்த்தீவ் படேல், பிளமிங் அதிரடியாக ஆடினால் நல்ல வாய்ப்பு உண்டாகும். சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டம் சென்னைக்கு பக்கபலம். டோணி நிலைமைக்குத் தகுந்தாற்போல களமிறங்கினால் நல்லது என்று கிரிக்கெட் விமரிசகர்கள் கருதுகின்றனர்.
டெக்கான் சார்ஜர்ஸை பொறுத்தவரை கில்கிறிஸ்ட், அப்ரிதியின் அதிரடி ஆட்டம் மிகுந்த பலமானது. இளம்வீரர்கள் ரோஹித், வேணுகோபால் பேட்டிங்கில் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.
அனுபவமிக்க இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமிண்டா வாஸ் பக்கபலம். ஹைதராபாத் அணியான டெக்கான் சார்ஜர்சுக்கு சொந்த மைதானம் ராசியில்லை போலும். இங்கு விளையாடிய 6 ஆட்டங்களிலும் இந்த அணி தோல்வியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான இந்நிலையில் இரு அணிகளும் இன்று களம் இறங்குகின்றன.