சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கும் இடையே நடந்த ஐபிஎல் டுவென்டி 20 போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. சென்னை அணி சந்திக்கும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் இதுவரை தோல்வியையே காணாத அணியாக வலம் வந்து கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நேற்று சொந்த மண்ணில் அதிர்ச்சி காத்திருந்தது.
ஷேவாக் தலைமையிலான டெல்லி அணியை நேற்று சந்தித்த டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் தோல்வி கிடைத்தது.
முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக வித்யூத் சிவராமகிருஷ்ணன் 54 ரன்கள் எடுத்தார். டோணி 32 ரன்களும், மார்க்கல் 28 ரன்களும் சேர்த்தனர். பார்த்திவ் படேல் 21 ரன்களைச் சேர்த்தார்.
மாத்யூ ஹைடன் அணியில் இல்லாதது சென்னைக்கு பெரும் பலவீனமாக இருந்தது நேற்றைய ஆட்டத்தில் தெரிந்தது.
பின்னர் விளையாட டெல்லி அணி 19 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து சென்னையை வென்றது. கேப்டன் ஷேவாக் பட்டாசாக பொரிந்து 71 ரன்களைக் குவித்தார். கம்பீர் 50 ரன்கள் எடுத்தார்.