கிம்பர்லி: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை துவைத்து எடுத்து விட்டது. மாத்யூ ஹைடன் மற்றும் பத்ரிநாத் சிறப்பாக ஆடி வெற்றி தேடித் தந்தனர்.
இன்னொரு போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வென்றது.
ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்து லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஏற்கனவே ராஜஸ்தான் அணியை சென்னை வென்றிருந்ததால் நேற்றைய போட்டியிலும் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் வார்ன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
துவக்க வீரராக வந்த நமன் ஓஜா முதல் பந்திலேயே அவுட்டானார். அடுத்து வந்த அஸ்னோத்கர், ஸமித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய ஸ்மித் 33 பந்தில் 30 ரன்கள் எடுத்து, முரளிதரன் சுழலில் வெளியேறினார். அஸ்னோத்கர் 26 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 19 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். ஷேன் வார்ன் 1 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 11 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.
பத்ரிநாத் அதிரடி ஆட்டம்...
இதையடுத்து பேட் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல ஹைடன் நல்ல துவக்கம் தந்தார். ஆனால மறு முனையில், விஜய் 10, ரெய்னா 13 என அவுட் ஆகி வெளியேறினர்.
ஆனால் பின்னர் வந்த பத்ரிநாத் அசத்தினார். ஹைடனுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து வந்த பந்துகளையெல்லாம் ரன்களாக்கினர்.
இந்த நிலையில் ஹைடன் 1 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 44 பந்தில் 48 ரன்கள் எடுத்து, வார்ன் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டானார்.
அதிரடியாக பேட் செய்த பத்ரிநாத், ஹார்வுட் வீசிய 16வது ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் சேர்க்க, சென்னையின் வெற்றி உறுதியானது. அரைசதம் கடந்த பத்ரிநாத் 1 சிக்சர், 9 பவுண்டரிகள் உட்பட 41 பந்தில் 59 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் 18.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.
பத்ரிநாத்துக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
தற்போது 13 புள்ளிகளுடன் சென்னை அணி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
பஞ்சாப் அசத்தல்...
முன்னதாக நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, டெக்கான் சார்ஜர்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த டெக்கான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. கில்கிறிஸ்ட் 20, கிப்ஸ் 13 ரன்கள் எடுத்தனர். சூப்பராக பேட் செய்த டெக்கான் அணியின் சைமண்டஸ் 36 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்.
அடுத்து பேட் செய்த பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணி சார்பில் சங்ககரா 25, யுவராஜ் 18, ஜெயவர்தனா 43 ரன்கள் எடுத்தனர்.
ஜெயவர்த்தனா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.