போர்ட் எலிசபெத்: பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டுவென்டி-20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பேட்டிங்கில் ஹைடனும், பந்துவீச்சில் முரளிதரனும் அபார திறமையை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.
ஐபிஎல் சீசன் 2 டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த ஐந்தாவது லீக் போட்டியில் டோணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பீட்டர்சன்னை கேப்டனாக கொண்ட பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற டோணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக பார்த்திவ், ஹைடன் வந்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 106 ரன்கள் எடுத்து அசத்தியது. பார்த்திவ் 30 ரன்களுக்கு அவுட்டானார்.
இவரை தொடர்ந்து பெங்களூர் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹைடனும் வெளியேறினார். ஹைடன் 2 சிக்சர், 9 பவுண்டரி உட்பட 35 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த ரெய்னா 28 பந்தில் 29 ரன்கள் எடுத்து பிரவீண் குமார் பந்தில் அவுட்டானார். டோணி 16, மார்கல் 5 ரன்களுக்கு வெளியேறினார்கள். அதிரடி காட்டிய பிளின்டாப் 1 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
முரளி கலக்கல்...
அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணிக்கு துவக்கம் மோசமாக அமைந்தது. துவக்க வீரராக வந்த பிரவீண் டக் அவுட்டாகி ஏமாற்றினார். 20 ரன்கள் எடுத்த உத்தப்பா, முரளி சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து கலக்கிய முரளி, கேப்டன் பீட்டர்சன்னை டக் அவுட்டாக்கினார்.
காலிஸ் 24 ரன்கள் எடுத்தார். டிராவிட் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாலாஜி பந்தில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேற பெங்களூர் அணி 15.2 ஓவரில் 87 ரன்களுக்கு சுருண்டது. சென்னை அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.
4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட் கைப்பற்றிய முரளிதரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.