ஈஸ்ட் லண்டன்: டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் தோனி அதிரடியாக பேட் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.
ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கில்கிறிஸ்டை கேப்டனாக கொண்ட டெக்கான் சார்ஜ்ர்சை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற டோணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக வந்த ஹைடன், விஜய் அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர். ஹைடன் அதிரடியாக பேட் செய்தார். மறுமுனையில் அவருக்கு விஜய் நல்ல ஒத்துழைப்பு தந்தார்.
3 சிக்சர், 5 பவுண்டரி விளாசிய ஹைடன் 26 பந்தில் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். விஜய் 31 ரன்களுக்கு அவுட்டானார். மூன்றாவது வீரராக வந்த டோணி, டெக்கான் பந்துவீ்ச்சை ஒரு கை பார்த்தார். மறுமுனையில் ரெய்னா வரிசையாக இரண்டு சிக்சர் அடித்தார். அவர் 19 பந்தில் 32 ரன்கள் எடுத்து, ஆர்.பி.சிங் பந்தில் அவுட்டானார்.
டோணி 1 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 37 பந்தில் 58 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த டெக்கான் அணிக்கு துவக்கம் படுமட்டமாக அமைந்தது. கில்கிறிஸ்ட், கிப்ஸ், லட்சுமண் என முதல் மூன்று வீரர்களும் சொல்லி வைத்தார் போல டக் அவுட்டானார்கள்.
ரோகித் சர்மா 21, சுமன் 17 ஓரளவு ரன்கள் சேர்ததனர். டேவோன் ஸ்மித் மட்டும் அதிரடியாக 23 பந்தில் 49 ரன்கள் எடுத்து, ஆறுதல் அளித்தார். டெக்கான் சார்ஜர்ஸ் 14.3 ஓவரில் 100 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று, அசத்தி வருகிறது.