சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. சொந்த மண்ணில் சென்னை அணி விளையாடவுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் போட்டியை ரசிக்க காத்துள்ளனர்.
ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் நடைபெறும் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
சென்னை அணி ஏற்கனவே பஞ்சாப் அணியை வென்றுள்ளது. மும்பை அணியோ டிராவிட் தலைமையிலான பெங்களூர் அணியுடன் மோதி தோல்வியுற்றுள்ளது.
எனவே நெருக்கடியான நிலையில் மும்பை அணியும், தெம்பான நிலையில் சென்னை அணியும் இன்று களம் காண்கின்றன.
மும்பை அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஆட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காயம் காரணமாக அவருக்குப் பதில் ஹர்பஜன் சிங் கேப்டனாக பணியாற்றி வருகிறார். இன்றைய போட்டியிலும் சச்சின் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
மாறாக முதல் போட்டியில் வென்றதாலும், சொந்த மண்ணில் ஆடவுள்ளதாலும் சென்னை அணி படு குஷியாக தனது 2வது போட்டியில் மும்பையை எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கு பாதுகாப்புக்காக 1500 போலீஸார் குவிக்கப்படட்டுள்ளனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இவர்கள் நிறுத்தப்படுவர்.
ஸ்டேடியத்தில் ஏற்கனவே கண்காணிப்பு காமிரா வசதி உள்ளது. அதன் மூலம் கண்காணிக்கப்படும். முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் பாட்டில்கள், உணவு பார்சல்கள் கொண்டு செல்லக்கூடாது. கைகளில் தடி, கம்பு போன்றவற்றையும் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி போன்ற எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களும் எடுத்து செல்லக்கூடாது. செல்போன்களுக்கு தடை இல்லை. அதேசமயம், உரிய சோதனைக்கு பிறகு செல்போன்கள் அனுமதிக்கப்படும்.
மைதானத்தின் வெளியே அதிக விலைக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களும், போலி டிக்கெட் விற்பவர்களும் கண்காணிக்கப்படுவார்கள். போலி டிக்கெட் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரிக்கெட் போட்டியை காண ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் உள்ளிட்டோர் வரக் கூடும்.
சென்னை அணியின் விளம்பர தூதுவர்களான விஜய், நயனதாரா ஆகியோரும் வந்து தங்களது அணியை உற்சாகப்படுத்தவுள்ளனர்.
போட்டி 11 மணிக்கு முடிவடைவதால் அந்த சமயத்தில் பேருந்துகள், ரயில் வசதியும் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தில் 44 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வசதி உள்ளது. இருந்தாலும், 38 ஆயிரம் ரசிகர்கள் தான் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
சேப்பாக்கம் ஸ்டேடியம் உள்ள பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.