செஞ்சூரியன்: நேற்று நடந்த ஐபிஎல் முதல் அரை இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அபாரமாக ஆடி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2வது அரை இறுதியில், சென்னை அணியும், பெங்களூரும் சந்திக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன. நேற்று முதல் அரை இறுதிப் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்தது.
ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஆடம் கில்கிறைஸ்ட் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின.
இரு அணிகளும் வலுவான நிலையில் இருந்ததால் யார் இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது என்ற எதிர்பார்ப்பு ஏகமாக இருந்தது.
முதலில் டெல்லி அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களான கம்பீரும், வார்னரும் டக் அடித்து அவுட் ஆகினர். பின்னர் இணைந்த ஷேவாக்கும், தில்ஷானும் சற்று அதிரடியாக ஆடினர்.
இருப்பினும் ஷேவாக் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். தில்ஷான் 65 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் வந்தவர்களில் டிவில்லியர்ஸ் மட்டும் 26 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது டேர்டெவில்ஸ்.
அடுத்து இறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்கமே அதிரடியாக இருந்தது.
கேப்டன் கில்கிறைஸ்ட் புயலென ரன்களைக் குவித்தார். வந்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கு அனுப்பி அவர் ரன் குவித்த வேகத்தைப் பார்த்து ஷேவாக் திகைத்துப் போய் விட்டார்.
பதினேழே பந்துகளில் அரை சதத்தைத் தொட்டு விட்டார் கில்கிறைஸ்ட். அடுத்தும் விடாமல் தொடர்ந்து ஆடிய அவர் 35 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து விட்டுத்தான் ஓய்ந்தார்.
மறுபக்கம் கிப்ஸ் டக் அடித்தார். பிலாக்கியா 10 ரன்களில் வெளியேறினார். சுமன் 24, சைமன்ட்ஸ் 24 என எடுத்தனர். கில்கிறைஸ்ட் போட்ட அதிரடியால் பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக ஆட முடிந்தது.
இறுதியில், 4 விக்கெட்களை மட்டுமே இழந்த ஹைதராபாத் அணி 17.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.
இன்று சென்னை - பெங்களூர் மோதல்..
இன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
பெங்களூர் அணி இடையில் சில போட்டிகளில் தடுமாறியது. ஆனால் கடைசி ஆட்டங்களில் கலக்கி விட்டது.
அதேபோலத்தான் சென்னை அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. ஆனால் கடைசி நேரத்தில் பிரமாதமாக ஆடியது.
ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.