சென்னை: தென் ஆப்ரிக்காவில் நடக்கவிருக்கும் ஐபிஎல் சீசன் 2 தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று காலை தென் ஆப்ரிக்கா கிளம்பியது. கேப்டன் டோணி, பாலாஜி, பிளின்டாப் உள்ளிட்ட வீரர்கள் வரும் 15ம் தென் ஆப்ரிக்கா செல்கிறார்கள்.
இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் சீசன் 2 டுவென்டி-20 தொடர், தேர்தல் நடப்பதன் காரணமாக தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டது. வரும் 18ம் தேதி கேப்டவுனில் நடக்கும் முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று காலை 9.45 மணிக்கு சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக ஜோகன்னஸ்பர்க் கிளம்பியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நாளை ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து டர்பனுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் 6 நாள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். பின்னர் சில பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடுகிறார்கள். பின்னர் வரும் 18ம் தேதிக்கு நடக்கும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
விமானத்தில் கிளம்புவதற்கு முன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் கூறுகையி்ல், தொடருக்கு தயாராக வந்துள்ளோம். கடந்த முறை பைனலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வெற்றியை பறிகொடுத்தோம். இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றுவோம்.
நியூசிலாந்து தொடரில் பங்கேற்க சென்றுள்ள கேப்டன் டோணி இன்று மாலை அல்லது இரவு தனது அணியுடன் இந்தியா திரும்புகிறார். அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. சிறிது நாட்கள் ஓய்வெடுத்து கொண்டு வரும் 15ம் தேதி தென் ஆப்ரிக்காவில் சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேர்ந்து கொள்வார்கள்.
பாலாஜி, முரளி விஜய் ஆகியோரும் தென் ஆப்ரிக்கா வருதவாதற்கு சற்று தாமதமாகும். இங்கிலாந்து நட்சத்திரம் பிளின்டாப், நியூசிலாந்தின் ஜேகப் ஓரம் ஆகியோரும் 15ம் தேதி தென் ஆப்ரிக்கா வருவார்கள். சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வீரர்களுக்கு பயிற்சி தேவையில்லை. அவர்கள் நேரடியாக போட்டியில் பங்கேற்பார்கள்.
எந்த போட்டியி்ல் எந்த அணி வெல்லும் என சொல்ல முடியாத அளவுக்கு கடும் போட்டி இருக்கிறது. சில மைதானங்கள் மிகவும் சிறிதாக இருப்பதால் ரசிகர்கள் சிக்சர் மழையில் நனையலாம் என்றார் காசி விஸ்வநாதன்.