சென்னை: இந்திய கிரிக்கெட்டின் 'ரஜினிகாந்த்' எம்.எஸ்.டோணி என்று இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணியை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை அறிமுகப்படுத்தும் கண்கவர் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது சென்னை அணியின் கேப்டனாக டோணி அறிவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் சென்னை அணியின் பிராண்ட் அம்பாசடர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நட்சத்திர தூதுவர்களான நடிகர் விஜய், நடிகை நயனதாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் இந்த நிழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
அப்போது பேசிய ஸ்ரீகாந்த், "இந்திய கிரிக்கெட்டின் ரஜினிகாந்தாக டோணி விளங்குகிறார். இருவரும் தங்களுக்கென ஒரு ஸ்டைலும், கவர்ச்சியும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் உடையவர்கள்" என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதைக்கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து பேசிய டோணி "திறமையான ஓர் அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இளமையின் துள்ளலும், பழுத்த அனுபவத்தையும் உடைய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றை அடைந்து கோப்பையை உறுதியாக வெல்வோம்" என்றார்.