கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களைப் பார்த்து சென்னை வீரர்கள் சுருண்டு ஓடிக் கொண்டிருந்த நிலையில் கேப்டன் டோணி மட்டும் தனி மனுஷனாக போராடி வீரத்துடன் விளையாடினார். ஆனால் அவரால் அணியைக் கரை சேர்க்க முடியாமல் போனது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமே.
நேற்றைய இறுதிப் போட்டியில் டோணி எடுத்த 63 ரன்கள்தான் நேற்றைய போட்டியில் எடுக்கப்பட்ட தனி நபர் அதிகபட்ச ரன்னாகும். 45 பந்துகளைச் சந்தித்த அவர் 5 சிக்ஸர்களையும், 3 பவுண்டரிகளையும் விளாசி 63 ரன்களைக் குவித்தார்.

கடைசி வரை டோணி தனது அதிரடியை விடவில்லை. தோல்வி உறுதி என்பது தெரிந்து போய் விட்ட நிலையிலும் கூட அவர் பந்துளைத் தூக்கி அடித்து சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார்.
போலார்ட் வீசிய கடைசி ஓவரில் அவர் 2 சிக்ஸர்களை விளாசினார். கடைசியாக அவர் ஒரு பவுண்டரியை அடித்து ஆட்டத்தை முடித்தார்.
இறுதி வரை விடாமல் சீரியஸாக விளையாடிய டோணியைப் பார்த்து மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர். டோணி அடித்த ஒவ்வொரு பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் கைத்தட்டல் பறந்தது.