
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களின் கைதுடன் ஆரம்பமானது ஐபிஎல் பிக்ஸிங் விவகாரம். இதன் பிறகு புக்கிகள், பாலிவுட் நடிகர் கைது என தொடர்ந்த இந்த விவகாரம் கடைசியாக ஐபிஎல் அணிவரையிலும் நீடித்திருக்கிறது. மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்துவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் என தகவல்கள் வெளியானது. பின்னர் வின்துவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்றும் அவர் ரூ1 கோடி பெட் கட்டி இழந்திருக்கிறார் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்காக மும்பை போலீசார் குருநாத் மெய்யப்பனை தேடி சென்னை வந்தனர். ஆனால் அவர் கொடைக்கானலில் இருந்தார். அவரை ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டது. தமக்கு கால அவகாசம் கோரியிருந்தார் குருநாத். இதை மும்பை போலீசார் நிராகரித்ததால் வேறுவழியின்றி நேற்று உடனடியாக மும்பைக்கு விமானம் மூலம் குருநாத் புறப்பட்டுச் சென்றார். மும்பை விமான நிலையத்தில் இருந்தே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு கைதும் செய்தனர். இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கவுரவ உறுப்பினர்தான் குருநாத் மெய்யப்பன் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் குருநாத்தின் மாமனாருமான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்தது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளம், குருநாத்தின் ட்விட்டர் பக்கங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அணியில் அவர் வகித்த பொறுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் பெட்டிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அந்த அணி ஐபிஎல் போட்டிகளில் இருந்து நீக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணியிடம் கருத்து கேட்ட போது, அப்படி சென்னை அணியை நீக்கினால் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டேன்.. நான் பணத்துக்காக விளையாடவில்லை என்று கூறியுள்ளார்.