
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 3-ந் தேதி முதல் மே 26-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் உட்பட மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன.
நடப்பு ஐ.பி.எல். சீசனுக்கான வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட்சோழா ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகிறது.
மிகவும் அதிக விலைக்கு போகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் கிளார்க் ஆகியோர் அடிப்படை விலையான ரூ2.12 கோடிக்குத்தான் ஏலம் போயினர். பாண்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியும் கிளார்க்கை புனே வாரியர்ஸ் அணியும் ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் ஆர்.பி.சிங்கை ரூ2.12 கோடிக்கு பெங்களூர் அணியும், தென்னாப்பிரிக்காவின் போத்தமை டெல்லி அணி ரூ2.40 கோடிக்கும் ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலியாவின் மாக்ஸ்வெல் ரூ5.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அபிஷேக் நாயர் ரூ3.5 கோடிக்கு புனே வாரியர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸை புனே வாரியர்ஸ் அணி ரூ.3.86 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது.
சன் குழுமம் வாங்கியிருக்கும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக ஏலத்தில் கலந்து கொண்டது. இலங்கையின் திசாரா பெரேரா, மேற்கிந்திய தீவுகள் அணியின் சமி ஆகியோரை இந்த அணி ஏலம் எடுத்தது. திசாராவை ரூ3.59 கோடிக்கும் சமியை ரூ2.56 கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்தியாவின் ஜெய்தேவை ரூ2.7 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். அதேபோல் மற்றொரு இந்திஅய் வீரரான மன்ப்ரீத்தை ரூ2.6 கோடிக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.