டெல்லி: சியர்லீடர்ஸ், சியர் கேர்ள்ஸ் என அழைக்கப்படும் ஐபிஎல் ஆட்ட சுந்தரிகளுக்கு சிவசேனா போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லி அணி சியர்கேர்ள்ஸ்களுக்கு விடை கொடுத்துள்ளது.
வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின்போது ரசிகர்களை உற்சாகப்படுத்த அழகிகள் கும்பல் ஆடிப் பாடி அசத்துவது சகஜமான விஷயம். இதுவரை இந்தியாவில் இதுபோன்ற ஆட்டங்கள் வழக்கமில்லை. ஆனால் ஐபிஎல் புண்ணியத்தால் இந்தியாவுக்கும் 'ஆட்டக்காரிகள்' கலாச்சாரம் வந்து விட்டது.
ஐபிஎல் டுவென்டி 20 போட்டிகளின்போது மைதானங்களில் தனி மேடை போட்டு கலர் கலர் டிரஸ்களில், படு கிளாமராக அழகிகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையடுத்து ஐபிஎல் அணிகள் அழகிகளின் ஆட்டத்தை சற்றே அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கின்றன. சென்னையில் நடந்த போட்டிகளின்போது, அடக்க ஒடுக்கமாக அழகிகள் ஆடினர். அதேபோலத்தான் மும்பையிலும் அமைதியான முறையில் ஆட்டம் நடந்தது.
இந்த நிலையில், டெல்லி டேர் டெவில்ஸ் அணி திடீரென சியர்கேர்ள்ஸுகளுக்குத் தடை போட்டுள்ளது. அழகிகளின் ஆட்டத்திற்குப் பதில், டிரம்ஸ் கலைஞர்களை அது தேர்வு செய்துள்ளது.
இந்த அழகிகள் இந்தியாவுக்கு வர முக்கிய காரணமே விஜய் மல்லையாதான். அவர்தான் அமெரிக்காவுக்குப் பறந்து சென்று வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் என்ற அமெரிக்க கால்பந்து அணியின் சியர்கேர்ள்ஸ் படையை இந்தியாவுக்கு வரவழைத்தார். இதைப் பார்த்த மற்ற அணிகளும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அழகிகள் கூட்டத்தை திரட்டி வந்தனர்.
ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ரசிகர்களும் அழகிகளை ரசித்தனர். ஆனால் சிவசேனா போன்ற கட்சிகளின் எதிர்ப்பால் இந்த அழகிகளின் ஆட்டம் மவுசிழந்து போய் விட்டது. மேலும், ரசிகர்களும் கூட பெரிய அளவில் இவர்களை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், செய்தித் தாள்களில் வெளியாகும் சியர்கேர்ள்ஸ் படங்களைப் பாருங்கள். இது நிச்சயம் நமது கலாச்சாரமே அல்ல. நமது அக்காவோ, தங்கச்சியோ இப்படி ஆடுவதை நாம் அனுமதிப்போமா, அல்லது வேடிக்கை பார்ப்போமா என்று கொதிப்புடன் கேட்கிறார்.
இது அமெரிக்காவுக்கு நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் நமது கலாச்சாரத்திற்கு இது நிச்சயம் பொருத்தமானதல்ல, நல்ல விஷயமல்ல என்கிறார் கத்காரி.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் இனிமேல் நடக்கும் போட்டிகளில் சியர்கேர்ள்ஸ் ஆட்டத்திற்குப் பதில், இனிமேல் டிரம்ஸ் கலைஞர்கள் மட்டும் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு யாருடைய நெருக்கடியும் காரணமல்ல. விதம் விதமான பொழுதுபோக்கு விஷயங்ளை அறிமுகப்படுத்தும் நோக்கில்தான் இந்த மாற்றம். எதிர்காலத்தில் உள்ளூரைச் சேர்ந்த சியர் கேர்ள்ஸ்களை, நமது பாரம்பரிய உடையில் நாம் ஆட வைக்க முடியும் என்று கூறுகிறார் டெல்லி அணியின் உரிமையாளரான ஜிஎம்ஆர் குழுமத்தின் செய்தித் தொடர்பாளரான ஸ்ரீராம் ராமதாஸ்.