மும்பை: இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன் போலத்தான் இந்த ஐபிஎல். இதில் விளையாட்டுக்கு மதிப்பில்லை. மாறாக கவர்ச்சி, பொழுதுபோக்கு இதுதான் உள்ளது என்று பேசியுள்ளார் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பவனானுமான பிஷன் சிங் பேடி.
இந்திய கிரிக்கெட் வாரியத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வறுத்தெடுப்பவர் பேடி. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை தற்போது வாரியுள்ளார் பேடி.
இதுகுறித்து ஒரு டாக் ஷோவில் அவர் கூறுகையில், ஐபிஎல்லுக்கு எனது ஆதரவு கிடையாது.எனது ஆதரவு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே. அதுதான் நமது பாரம்பரியம். ஆனால் அந்தப் பாரம்பரியத்தைக் காக்க கிரிக்கெட் வாரியம் எதுவும் செய்வதில்லை. மாறாக ஐபிஎல்லை முன்னிறுத்துகிறது.

இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்தான் ஐபிஎல். இங்கு கவர்ச்சி, பொழுதுபோக்கு, பொழுதுபோக்கு, பொழுதுபோக்கு இது மட்டுமே உள்ளது. இது நமது பாரம்பரியம் அல்ல என்றார் அவர்.
அதே ஷோவில் கலந்து கொண்ட இன்னொரு முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் கூறுகையில், கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட் கிரிக்கெட்தான். அதேசமயம், நான் ஐபிஎல்லை முழுமையாக எதிர்க்கவில்லை. அது நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கிடைக்க சிறிய அளவில் உதவியுள்ளது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போது நமது நாட்டில் கிரிக்கெட்டின் தரம் தாழ்ந்து போய் விட்டது. இப்படியே போனால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் ஏற்படும்.