பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் இன்று அனில் கும்ப்ளே 600 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். பெர்த் நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆண்ட்ரூ சைமண்ட்சின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது இந்திய வீரர், உலக அளவில் மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கும்ப்ளே வீசிய பந்தை அடித்த சைமண்ட் ராகுல் திராவிட்டிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 330 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா திணறி வருகிறது. கும்ப்ளே தனது 400 வது விக்கெட்டை பெங்களுரிலும், 500வது விக்கெட்டை மொகாலியிலும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முத்தையா முரளீதரன் 723 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னே 708 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப்ளே அதிக அளவிலான விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத்தான் என்பதும் நினைவுகூறத்தக்கது. இதுவரை 104 ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.