மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின், இந்திய பிரிமீயர் லீக் அணிகள், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிரைஸ்ட் மற்றும் இந்திய கேப்டன் டோணியை தங்களது அணிகளுக்கு இழுக்க கடுமையாக முயன்று வருகின்றன. இதற்காக பெரும் தொகையை தர அவர்கள் முன் வந்துள்ளனர். இந்திய பிரீமியர் லீக்கில் மொத்தம் எட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் இந்த அணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏலம் விட்டது. முகேஷ் அம்பானி மும்பை அணியையும், ஷாருக்கான் கொல்கத்தாவையும், விஜய் மல்லையா பெங்களூரையும், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், சென்னை அணியையும் ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலம் மூலம் நூற்றுக்கணக்கான கோடியை அள்ளியது இந்திய கிரிக்கெட் வாரியம். அடுத்து அணி வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலம் நாளை மும்பையில் நடக்கவுள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீரர்கள், சர்வதேச நட்சத்திர வீரர்களை தங்களது அணிக்கு எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக பெரும் தொகையை அவர்கள் மீது கட்டி ஏலம் எடுக்க அணிகள் காத்துள்ளனவாம். அதிகபட்ச எதிர்பார்ப்பு கில்கிறைஸ்ட் மீதும், இந்திய கேப்டன் டோணி மீதம்தான் உள்ளது. கில்கிறைஸ்ட்டை எப்படியாவது அணிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக கொல்கத்தாவும், மொஹாலி அணியும் படு தீவிரமாக உள்ளன. கொல்கத்தா அணியின் ஓனர் ஷாருக்கான், மொஹாலி அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா என்பது நினைவிருக்கலாம். கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் செளரவ் கங்குலி, கில்கிறைஸ்ட் எப்படியும் தங்களது அணியில் இடம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கண்டிப்பாக கில்கிறைஸ்ட் எங்களது அணிக்கு வர வேண்டும். பல நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் கில்லி போல வராது. அவர் ஒரு மிகச் சிறந்த வீரர், போராளி என்றார் கங்குலி. இந்த அணிகள் மட்டுமல்லாது 8 அணிகளுமே கில்கிறைஸ்ட்டை இழுக்க ஆர்வமாக உள்ளன. அதே அளவிலான டிமாண்ட் டோணிக்கும் உள்ளது. எட்டு அணிகளுக்கும் தலா 8 வெளிநாடு பிளஸ் தேசிய அணியின் வீரர்கள் ஒதுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டோணியை ஏலத்தில் எடுக்க குறைந்தபட்ச தொகையாக 4 லட்சம் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் வரிசையில் நட்சத்திர வீரராக, பெரும் பணக்கார வீரராக டோணி இணைகிறார். சச்சின் டெண்டுல்கர் மும்பை அணியிலும், கங்குலி கொல்கத்தா அணியிலும், டிராவிட் பெங்களூர் அணியிலும், யுவராஜ் மொஹாலி அணியிலும் இடம்பெறுவார்கள். இவர்களுக்கு ஏலம் நடக்காது. அவர்கள் இடம் பெறும் அணியில் யார் அதிக தொகையில் ஏலம் எடுக்கப்பட்டார்களோ, அதை விட 15 சதவீத கூடுதல் தொகை இந்த நட்சத்திர வீரர்களுக்கு கொடுக்கப்படும். கில்கிறைஸ்ட்டுக்கான ஏலத் தொகை 2.75 லட்சம் டாலராக உள்ளது. இது ரக்கி பான்டிங் மீதான தொகையை விட குறைவுதான். பான்டிங்கின் ஏலத் தொகை 3.50 லட்சம் டாலராகும். 8 அணிகளுமே ஸ்டார் வீரர்களையும், ஹாட் ஸ்டார்களையும் அள்ள ஆவலாக உள்ளன. இதனால் முன்னணி வீரர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 80 சர்வதேச வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். சர்வதேச வீரர்களில், ஆஸ்திரேலிய வீரர்களுக்குத்தான் அதிக டிமாண்ட் உள்ளது. அதேபோல தென் ஆப்பிரிக்கா, இலங்கை வீரர்களுக்கும் நல்ல டிமாண்ட் உள்ளது. ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள், தாங்கள் தேர்வு செய்யப்படும் அணியில் 3 ஆண்டுகளுக்கு விளையாடுவர். ஏப்ரல் 18ம் தேதி இந்திய பிரிமீயர் லீக் 20-20 போட்டித் தொடர் தொடங்குகிறது, மொத்தம் 59 போட்டிகள் நடைபெறும். இதில் 2 அரை இறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் அடங்கும். ஜூன் 1ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. பெங்களூரில் போட்டித் தொடர் தொடங்குகிறது. ஐபிஎல்-லில் 33 இந்திய வீரர்கள்: இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அனைத்து இந்திய வீரர்களுமே ஐபிஎல்லுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 33 வீரர்கள் ஐபிஎல்லில் இணைந்துள்ளனர்