கேப்டவுன்: ஐபிஎல் 2வது சீசன் டுவென்டி 20 தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் எதிர்பாராத முடிவுகள் ஏற்பட்டு தொடரை விறுவிறுப்பாக்கியுள்ளன.நேற்று நடந்த முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், 2வது போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் அபாரமாக வெற்றி பெற்று, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.ஐபிஎல் சீசன்-2 டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நேற்று முதல் தொடங்கியது. பிற்பகலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பீ்ல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்கு சச்சின், ஜெயசூர்யா என இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் துவக்க வீரர்களாக வந்தனர். அதிரடியாக விளையாடி ஜெயசூர்யா 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த தவான் கேப்டன் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.அடுத்து வந்த டுமினி (9), பிராவோ (5) விரைவில் வெளியேறினர். மறுமுனையி்ல் சிறப்பாக விளையாடிய சச்சின் அரைசதம் கடந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய அபிஷேக் நாயர், சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பிளின்டாப் ஓவரில் 3 சிக்சர் உட்பட 22 ரன்கள் எடுத்தார். இவர் 14 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.ஹர்பஜன் 4, ஜாகிர் 2 என வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். சச்சின் 49 பந்தில் 59 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு பார்த்திவ் (0), ரெய்னா (8) மோசமான துவக்கம் தந்தனர். அபாரமாக பேட் செய்த ஹைடன் 44, பிளின்டாப் 26 ஜோடி அணிக்கு நம்பிக்கை தந்தது. இவர்கள் வரிசையாக வெளியேற சென்னை அணி திணறியது.அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் தனி ஆளாக அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல டோணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. டோணி 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 26 பந்தில் 36 ரன் எடுத்து அவுட்டானார்.சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.கடந்த தொடரில் 2வது இடத்தைப் பெற்ற அணி சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.பெங்களூர் அணி அபாரம்...2வது போட்டியில், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியனான ஷான் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்டது.முதலில் பேட் செய்த பெங்களூர் அணிக்கு துவக்கம் நன்றாக அமையவில்லை. கேப்டன் பீட்டர்சன், டிராவிட் மட்டுமே ஒற்றை இலக்கத்தை தாண்டினார். பீட்டர்சன் 30 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.சிறப்பாக விளையாடிய டிராவிட் 1 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 48 பந்தில் 66 ரன்களை விளாசினார். பெங்களூர் அணி நிர்ணிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிரவீன் குமார் பந்துவீச்சில் மிரட்டினார். ஸ்மித் (2), அஸ்னோட்கர் (0) வரிசையாக அவுட்டானார்கள்.பிறகு வந்தார் ஜாம்பவான் கும்ப்ளே. வேகப் பந்து வீச்சாளர்கள் மட்டும்தான் டுவென்டி 20 போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை தவிடுபொடியாக்கும் வகையில் இருந்தது கும்ப்ளேவின் அபார சுழற்பந்து வீச்சு.கும்ப்ளேவின் சுழலில் சிக்கி வேகமாக சுருண்டது ராஜஸ்தான் அணி. 15.1 ஓவரில் 58 ரன்களுக்கு சுருண்டு போனது ராஜஸ்தான். ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் கும்ப்ளே.இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தி்ல் படுதோல்வியடைந்தது. இது தான் ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும். நடப்புச் சாம்பியன் மற்றும் கடந்த தொடரில் 2வது இடம் பிடித்த ஆகிய இரு அணிகளும் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவியது போட்டித் தொடரின் விறுவிறுப்பை அதிகரித்து விட்டது.இன்று ...இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும், 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதுகின்றன. #13;