
ரஞ்சிக் கோப்பைக்கான இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை அணியும், குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா அணியும் மோதின.
முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணியை 148 ரன்களுக்குள் சுருட்டிய மும்பை அணி பேட்டிங்கிலும் அதிரடியை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் ஜாபர் 132 ரன்கள் குவித்தார். சச்சின் 22 ரன்கள் எடுத்தார். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ஷா அரை சதம் கடந்தார், அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் சில பவுண்டரிகளை விளாசிய சவான் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்திருந்தது. 207 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ம் இன்னிங்சைத் தொடங்கிய சவுராஷ்டிரா அணியை மும்பை பந்துவீச்சாளர்கள் பதம் பார்த்தனர். அந்த அணியின் 4 விக்கெட்டுகளை அகர்கர் கைப்பற்றினார். சவுராஷ்டிரா அணியின் 2-ம் இன்னிங்ஸ் வெறும் 82 ரன்களில் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 40-வதுமுறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது.