டெல்லி: மக்களவைத் தேர்தல் மற்றும் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போன்ற காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகளின் தேதிகளை மாற்றப்படுவதாக அதன் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.
ஐபிஎல் அமைப்பு இரண்டாவது ஆண்டாக வரும் ஏப்ரல் 10ம் தேதி டுவென்டி-20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டிகள் நடக்கும் அதே சமயங்களில் ஐந்து கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி துவங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
போலீசார், ஊர்காவல் படையினர் என தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 21 லட்சம் பேர் பயன்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளும் நடத்தால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போய்விடும். இதனால் போட்டிகளை ஒத்திவைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லலித் மோடியிடம் தெரிவித்தார்.
ஆனால், தேர்தல் நடக்கிறது என்பதற்காக மொத்த இந்தியாவே ஸ்தம்பித்துவிடாது என்று முதலில் காரசாரமாக பேசிய லலித் மோடி தற்போது மனம் மாறியுள்ளார். போட்டிகளை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் ஒட்டுமொத்தமாக ஒத்திவைக்கப்பட்டால் இந்த அமைப்புக்கு டிவி ஒளிபரப்பு உரிமை, மைதான ஸ்பான்சர்ஷிப், விளம்பர வருமானம் போன்றவைகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ரூ 675 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சில போட்டிகளின் தேதிகளை மட்டும் ஐபிஎல் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
இது குறி்த்து நிருபர்களுக்கு மோடி அவர் அளித்த பேட்டி:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் நாட்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய 24 மணி முதல் 48 மணி நேரங்களுக்கு போட்டிகள் நடக்காது.
மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டி தேதிகள் இன்று அறிவிக்கப்படும். ஆறு அல்லது ஏழு போட்டிகளின் தேதிகள் மாற்றப்படும். மும்பையில் ஏப்ரல் 30ல் தேர்தல் நடக்கிறது என்றால் அங்கு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியிலும், மே மாதத்தின் இரண்டாவது பாதியிலும் போட்டிகளை நடத்த முடியும்.
தேர்தல் மற்றும் கிரிக்கெட் ஒரே சமயத்தில் நடந்தால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம். அதற்காக இந்தியாவில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. எங்களால் அதிக பாதுகாப்பு அளிக்கமுடியும். என்றாலும் பாதுகாப்பு வீரர்களுக்கு அதிக வேலை பளு கொடுக்க கூடாது என நினைக்கிறோம்.
இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒன்றாக கருத முடியாது. பாகிஸ்தானில் எப்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், இந்தியாவில் பாதுகாப்பு குறித்து எந்த அணியினரும் கவலை கொள்ள தேவையில்லை. அதை நாங்கள் முழுவதுமாக கவனித்து கொள்வோம்.
ஐபிஎல் போட்டிகள் எப்போதும் பாதுகாப்பு நிறைந்தவைகளாகவே இருக்கும். இந்த வார இறுதியில் தென் ஆப்ரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் லலி்த் மோடி.