இந்தியாவை 7 விக். வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 டுவென்டி-20, 5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டுவென்டி-20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்தியாவுக்கு துவக்க வீரர்களாக ஷேவாக், கம்பீர் வந்தனர். முதல் ஓவரிலேயே ஷேவாக் அதிரடி காட்டினார். அவர் சந்தித்த முதல் மூன்று பந்துகளிலும் வாணவேடிக்கை காட்டினார். ஹாட்ரிக் சிக்சர் அடித்து ரசிகர்களை குஷி படுத்தினார்.
கம்பீர் 6 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சூப்பராக பேட் செய்த ஷேவாக் 10 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவரை தொடர்ந்து ரோகித் சர்மா 7, யுவராஜ் 1, கேப்டன் டோணி 2 என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நடையை கட்ட இந்திய அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.
அடுத்து வந்த யூசுப் பதான், மெக்கலம் வீசிய 10வது ஓவரின் முதல் மூன்று பந்துக்களையும் வரிசையாக சிக்சருக்கு அனுப்பினார். நான்காவது பந்தையும் சிக்சருக்கு விரட்ட முயற்சி செய்தார். ஆனால் அதை ஜேக்கப் ஓரம் கேட்சாக மாற்றி, அவரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அவர் 8 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்.
ஒருபக்கம் வரிசையாக விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் தூண் போல் நிலைத்து ஆடினார் ரெய்னா. தவறான பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் மாற்றினார். ஓ பிரையன் பந்தை சிக்சருக்கு விரட்டி அரைசதம் கடந்தார்.
இர்பான் பதான் 12, ஹர்பஜன் 21 ரன்கள் எடுத்து இவருக்கு துணை நின்றனர். இந்தியா 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ரெய்னா 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரைடர் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். மூன்றாவது வீரராக வந்த குப்டில் அதிரடியாக ரன்கள் சேர்க்க, ஆட்டம் மெல்ல நியூசிலாந்து வசம் செல்லத் துவங்கியது. இவர் 3 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 28 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பொறுப்புடன் பேட் செய்த ரோஸ் டெய்லர் 20 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். அபாரமாக விளையாடிய துவக்க வீரர் மெக்கலம் 56, ஓரம் 29 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றனர். நியூசிலாந்து 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டொன்டி-20 போட்டி வரும் 27ம் தேதி வெல்லிங்டனில் நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications