
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணை, தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று கடிதம் அனுப்பிய முதல்வர் ஜெயலலிதா, தமிழர்களின் உணர்வுகளை மதித்து சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஐபில் நிர்வாக கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட வேண்டாம் என அணிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். போட்டி நடைபெறும் நேரத்தில் பாதுகாப்பு அவசியம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சென்னையில் நடைபெறும் போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்றும் திட்டம் எதுவும் இலை என்றார்.