மொஹாலி: ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் கடைசி லீக் போட்டிகளில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்சையும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும் வீழ்த்தின.
ஐபிஎல் தொடரின் கடைசிச் சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. மொஹாலியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. பெங்களூரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இதில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் ஐபிஎல் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறி விட்டன. இதனால் ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் மோதின. அதேசமயம், ராஜஸ்தானும், பஞ்சாபும் ஏற்கனவே அறை இறுதிக்கு முன்னேறி விட்டன.
மொஹாலியில் நடந்த போட்டியில் வலுவான ராஜஸ்தான் அணியை பஞ்சாப் அணி அபாரமாக வென்றது. பஞ்சாப் அணியின் ஜெப் மார்ஷ் படு சிறப்பாக ஆடி சதம் போட்டார். 69 பந்துகளை மட்டுமே சந்தித்து இவர் 115 ரன்களைக் குவித்தார்.
அதேபோல ஹோப்ஸ் 51 ரன்களும், யுவராஜ் சிங் 49 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 221 ரன்களைக் குவித்தது பஞ்சாப் அணி.
பின்னர் ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணி ரன் எடுக்கத் திணறியது. கைப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் படேல் 57 ரன்களைக் குவித்தார். வாட்சன் 22, யூசுப் பதான் 39 ரன்களை எடுத்தனர். ராவத் 19 பந்துகளில் 23 ரன்களைச் சேர்த்தார்.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ராஜஸ்தான் அணி இறுதியில், 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியில் தோற்றாலும் கூட புள்ளிகள் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த அணி 22 புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி 20 புள்ளிகளுடன் உள்ளது.
பெங்களூரில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக ஒயிட் 26 ரன்களும், கோஸ்வாமி 20 ரன்களும் சேர்த்தனர். வினய் 23 ரன்களை எடுத்தார். டிராவிட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை அணியின் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெயசூர்யா அதிரடியாக ஆடிய 4 ரன்களைச் சேர்த்தார். டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் குவித்தார். உத்தப்பாவும் ஆட்டமிழக்காமல் 19 ரன்களை எடுத்தார். இறுதியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 15.5 ஓவர்களில் 126 ரன்களை எடுத்து ஆறுதல் வெற்றியைப் பெற்றது மும்பை.
இன்று ஐபிஎல் தொடரில் ஓய்வு நாளாகும். நாளை முதல் அரை இறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. அரை இறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் மும்பையில் நடக்கவுள்ளன.
நாளை நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.
31ம் தேதி நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
கலக்கிய ராஜஸ்தான்:
லீக் சுற்றுக்களில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார ஆட்டத்ைதக் காட்டி மற்ற அணிகளை பயமுறுத்தியது.
இப்போட்டித் தொடரில் 11 வெற்றிகள், 3 தோல்விகளைப் பெற்று 22 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தில் உள்ளது.
2வது இடத்தைப் பிடித்துள்ள யுவராஜ் சிங்கின் பஞ்சாப் அணிக்கு 10 வெற்றிகளும், 4 தோல்விகளும் கிடைத்தன.
3வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு வெற்றிகள் 6 தோல்விகளுடன் 16 புள்ளிகளுடன் உள்ளது.
டெல்லி அணிக்கு 7 வெற்றிகளும், 6 தோல்விகளும் கிடைத்தன. கொல்கத்தாவுடன் நடந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இந்த அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது. மொத்த புள்ளிகள் 15.