தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 2

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு தர இயலாது. மே 16ம் தேதிக்குப் பிறகு போட்டிகளை நடத்துங்கள், முழு அளவில் பாதுகாப்பு தருகிறோம் என்று மத்திய உள்துறை ஐபிஎல்லை கேட்டுக் கொண்டது.
ஆனால் தேர்தல் முக்கியமல்ல, விளையாட்டுதான் முக்கியம் என்று கருதிய ஐபிஎல் நிர்வாகம் போட்டிகளை வெளிநாட்டுக்குப் போய் நடத்திக் கொள்கிறோம் என்று அறிவித்தது.
இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் கூட அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் போட்டிகளை தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒன்றில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் தீர்மானித்து அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சு நடத்தியது.
இதில் தென் ஆப்பிரிக்காவில் போட்டிகளை நடத்த தற்போது முடிவாகியுள்ளது.
இதுதொடர்பாக ஜோஹன்ஸ்பர்க் நகருக்கு விரைந்த ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி அங்கு தென் ஆப்பிரிக்க கிரி்க்கெட் வாரிய தலைமை செயலதிகாரி ஜெரால்ட் மஜோலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து ஐபிஎல் 2வது சீசன் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என அறிவித்தனர்.
இதுகுறித்து லலித் மோடி கூறுகையில், தென்ஆப்பிரிக்க மக்கள் 20 ஓவர் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். இதனால் தான் அந்த நாடு முதலாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
இவை இரண்டும் தென்ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு சாதகமான அம்சமாக இருந்தன. ஒரு சில தினங்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு முழு அளவில் ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறோம்.
போட்டியை நடத்துவதற்கான பணியில் 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். தென்ஆப்பிரிக்காவில் போட்டியை நடத்துவதன் மூலம் அவர்கள் நிறைய பலன் அடைவார்கள். இந்த தொடருக்காக வீரர்கள், அதிகாரிகள், நடுவர்கள் தங்குவதற்கு ஓட்டலில் 30 ஆயிரம் அறைகள் தேவைப்படும். மேலும் 10 ஆயிரம் விமான டிக்கெட்டுகளும் தேவைப்படும்.
போட்டியை நடத்த மொத்தம் 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்றார் மோடி.
டர்பன், செஞ்சூரியன், போர்ட் எலிசபெத், ஜோஹன்ஸ்பர்க், கிழக்கு லண்டன், கேப்டவுன் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. எனவே ஐபிஎல் போட்டி அட்டவணை ஏப்ரல் 10ம் தேதிக்குப் பதில் 8 நாள் தாமதமாக 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டியின் கால அளவும் 45 நாட்கள் என்பதற்குப் பதில் 35 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு இரண்டு போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் இதைப் பார்க்கும் வகையில், முதல் போட்டி இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கும், 2வது போட்டி 8 மணிக்கும் தொடங்கும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:24 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications