
ஐபிஎல்லில் மும்பை அணி கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்த முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கொல்கத்தாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
இந்த வெற்றியை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கர் ஐ.பி.எல். விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், "உலகக் கோப்பையை பெறுவதற்கு நான் 21 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால், இந்த ஐ.பி.எல். கோப்பையை நான் 6 ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டேன்.
எனவே இந்த நல்ல தருணத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுகிறேன். அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் விளையாட மாட்டேன். இது நான் ஏற்கெனவே எடுத்த முடிவு. நாற்பது வயதாகிவிட்டது எனக்கு. நிஜத்தை நானும் உணர்கிறேன்," என்றார்.
ஏற்கெனவே ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்துவிட்டார் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இனி ஆடுவார்.