வெல்லிங்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. முன்னதாக முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சச்சின், ஷேவாக் அரைசதம் கடந்து சூப்பர் துவக்கம் தந்தனர்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருக்கிறது.இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்தது. டாஸ் வென்ற டோணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஷேவாக் 32 பந்தில் 50...துவக்க வீரர்களாக சச்சின், ஷேவாக் வந்தனர். ஆரம்பத்தில் இருந்து ஷேவாக் அதிரடியாக விளையாடினார். நியூசிலாந்து பவுலர்களை ஒருகை பார்த்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய சச்சின், அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.இந்நிலையில் ஷேவாக்கிற்கு காலில் லேசான சுளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து ரெய்னா பை-ரன்னராக வந்தார். தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஷேவாக் 32வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 1 சிக்சர் 9 பவுண்டரி உட்பட 36 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.இந்நிலையில் மழை வந்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஷேவாக் இருக்கும் வரை நிதானமாக விளையாடிய சச்சின் பின்னர் மெல்ல அதிரடிக்கு மாறினார். அரைசதம் கடந்த சச்சின் 61 ரன்களுக்கு (1 சிக்சர், 7 பவுண்டரி) வெட்டோரி பந்தில் அவுட்டானார். யுவராஜ் டக் அவுட்டாகி, ஏமாற்றினார். மழை மிரட்டல்...அடுத்து வந்த கேபட்ன் டோணி, கம்பீருடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் மீண்டும் மழை வந்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஓவர்களின் எண்ணிக்கை 34 ஆக குறைக்கப்பட்டு, ஆட்டம் துவங்கியது.கம்பீர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 28.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் மழை வந்தது. நீண்டநேரம் ஆகியும் மழை நிற்காததை அடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டோணி 23, ரெய்னா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.மூன்றாவது ஒரு நாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் வரும் 8ம் தேதி நடக்கிறது. #13;