
கடந்த 2008ல் முதல் ஐ.பி.எல்., தொடரின் போது மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப் அணி, மும்பை அணியை வீழ்த்தியது.
போட்டி முடிந்ததும் வீரர்கள் வரிசையாக கைகொடுத்தனர். பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீசாந்த் மும்பை அணியைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கிடம் ஏதோ கூறினார். தோல்வி விரக்தியில் இருந்த ஹர்பஜன் சிங், உடனே ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இப்பிரச்னையில் மீதமிருந்த அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க, ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் யார் மீது தவறு என்பது மர்மமாகவே இருந்தது.
இந்த சம்பவம் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவம் குறித்த உண்மையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
அவரது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
சம்பவத்தன்று ஹர்பஜன் சிங் எனது கன்னத்தில் அறையவில்லை. தோல்வியடைந்த கோபத்தில் ஏற்கனவே திட்டமிட்டு என் மீது முழங்கையினால் பலமாக குத்தினார். இதுகுறித்த உண்மையை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக, சம்பவத்தன்று எடுக்கப்பட்ட வீடியோவை முழுமையாக வெளியிட வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.