
சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை
1987ஆம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி ரஞ்சி கோப்பைக்கான போட்டிக்கு மும்பை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. தமது 15 வயதில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சதமடித்தார்.

பாகிஸ்தானில் முதல் போட்டி
இந்திய அணிக்காக 1989-ம் ஆண்டு டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது 16-வது வயதில் பாகிஸ்தானி கராச்சி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கால்தடம் பதித்தார் டெண்டுல்கர். அப்போது சியால்கோட்டில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இம்ரான்கான் வீசிய பந்து பவுன்சாகி டெண்டுல்கரின் மூக்கை பதம் பார்த்தது. ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவ உதவியை மறுத்து தொடர்ந்து விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார். பெஷாவரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் 18 பந்தில் 53 ரன்களைக் குவித்து அசரவைத்தார் டெண்டுல்கர். பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட் ஆக்கப்பட்டார்.

கொழும்பில் ஒருநாள் போட்டி முதல் சதம்
ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் முதல் சதமடித்தது கொழும்பில்தான். 1994-ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தமது முதல் சதத்தைப் பதிவு செய்தார் சச்சின். மொத்தம் 46 சதங்களை ஒருநாள் போட்டியில் அடித்திருக்கிறார் சச்சின்

ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். இந்த உலக சாதனையில் 49 சதங்களும் 56 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த பெருமையும் சச்சினுக்கு உண்டு! 2016 பவுண்டரிகளை அடித்து முதல் வீரரும் சச்சினே!

100-வது சதம்
டெஸ்ட் போட்டிகளில் 15,470 ரன்களை எடுத்து உலகின் முதல்நிலை வீரராக இருக்கிறார். சச்சின் கடந்த மார்ச் 16-ந் தேதி தமது 100-வது சதத்தை வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எட்டினார். இந்த 100-வது சதத்தை எதிர்பார்த்துதான் உலகமே காத்திருந்தது என்பது மிகையல்ல.

மேன் ஆப் த மேட்ச்
டெஸ்ட் போட்டிகளில் 13 முறையும் தொடர் நாயகன் விருதை 4 முறையும் பெற்றிருக்கும் சச்சின் ஒருநாள் போட்டிகளில் 60 முறை ஆட்ட நாயகன் விருதை தட்டியிருக்கிறார். ஒருநாள் போட்டி தொடர் நாயகன் விருதை 14 முறை பெற்றிருக்கிறார் டெண்டுல்கர்.

இந்திய அணி கேப்டனாக...
1996-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் தலைமையில் மொத்தம் 73 ஒருநாள் போட்டிகளையும் 25 டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா விளையாடியது. ஒருநாள் போட்டிகளில் 23 முறை வென்று 43 முறை தோற்றது. டெஸ்ட் போட்டிகளிலும் 4 முறை மட்டுமே வென்று 9 முறை தோற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தோல்விகளால் கேப்டன் பொறுப்பை 2000-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார் அவர். சவுரவ் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்றார்.

டோணியை கேப்டனாக்கிய டெண்டுல்கர்
2007-ம் டிராவிட் கேப்டனாகவும் டெண்டுல்கர் வைஸ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது கேப்டன் பொறுப்பிலிருந்து டிராவிட் விலகிவிட்டார். அப்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த சரத் பவார், டெண்டுல்கரை பொறுப்பேற்கக் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை நிராகரித்த டெண்டுல்கர், டோணியை கேப்டனாக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

90-100க்கு இடையே 23 முறை அவுட்
டெண்டுல்கர் 90 ரன்கள் வரை வேகமாக எடுத்துவிட்டு 100 அடிப்பதற்குள் படாதபாடுபட்டுவிடுவது வாடிக்கை. 99 ரன்களை எடுத்த நிலையில் 3 முறை அவுட் ஆகியிருக்கிறார். 90 ரன்களை தாண்டி 100 ரன்களை எடுப்பதற்குள் 23 முறை அவுட் ஆகியிருக்கிறார் ஜாம்பவான் டெண்டுல்கர்!

உலகக் கோப்பைகளில் டெண்டுல்கர்!
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்ததற்காக பெருமைப்படுவதாக சச்சின் தமது ஓய்வு அறிக்கையில் கூறியிருக்கிறார். மொத்தம் 6 உலகக் கோப்பைகளில் சச்சின் விளையாடியிருக்கிறார். 1992, 1996, 1999, 2003, 2007, 2011 ஆகிய உலகக் கோப்பைகளில் டெண்டுல்கர் பங்கேற்றிருக்கிறார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் 2 சதங்களடித்தார் சச்சின். குறிப்பாக அரை இறுதியில் இலங்கைக்கு எதிரான சச்சின் அபாரமாக ஆடினார்.

உலகக் கோப்பை போட்டி- மறைந்த தந்தை
டெண்டுல்கர் வாழ்க்கையில் மறக்க முடியாத உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1999! ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் போது டெண்டுல்கரின் தந்தை ரமேஸ் டெண்டுல்கர் காலமானார். இதனால் அவர் மும்பைக்கு திரும்பி வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் போட்டியில் விளையாட புறப்பட்டார் சச்சின்.

தந்தைக்கு சதத்தை அர்ப்பணித்தார்
தந்தை மறைந்து சில நாட்களிலேயே ஆடுகளத்துக்குத் திரும்பிய சச்சின்,கென்யாவுக்கு எதிரான போட்டியில் 101 பந்துகளில் 140 ரன்களைக் குவித்து அந்த சதத்தை தமது தந்தக்காக அர்ப்பணிப்பதாக அறிவித்து நெகிழ வைத்தார்... நிமிர்ந்து பார்க்க வைத்தார் சச்சின்.

ஐ.பி.எல்.-ல் டெண்டுல்கர்
ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக இருப்பவர் டெண்டுல்கர். கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கொச்சி அணிக்கு எதிராக 66 பந்துகளில் 100 ரன்களைக் குவித்து நாட் அவுட் ஆகாமல் இருந்தார் சச்சின். மொத்தம் 51 ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்ற சச்சின், 1723 ரன்களைக் குவித்தார்.

சர்ச்சையில் டெண்டுல்கர்
2001-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தின் போது பந்தை சேதப்படுத்தினார் என்பதற்காக ஒரு போட்டியில் விளையாட டெண்டுல்கருக்கு தடை விதிக்கப்பட்டது.
2002-ம் ஆண்டு சொகுசுக் காரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு டெண்டுல்கர் கொண்டுவரப்பட்டபோது அதற்குரிய சுங்க வரி செலுத்தும் விவகாரத்தில் டெண்டுல்கர் சர்ச்சையில் அடிபட்டார். இவருக்காகவே சட்டத்தில் திருத்தம் கூட கொண்டு வரப்பட்டு ரூ1.13 கோடி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கை எதிர்த்து வழக்கும் கூட தொடரப்பட்டது.

எம்.பியாக டெண்டுல்கர்
கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் டெண்டுல்கரை மத்திய அரசு ராஜ்யசபாவில் நியமன எம்.பியாக நியமித்தது. இந்தியாவிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் ஒருவருக்கு இப்படிப்பட்ட கவுரவம் அளிக்கப்பட்டது இதுதான் முதல் முறை. ஆனால் இந்த எம்.பி. பதவியும் கூட டெண்டுல்கரை சர்ச்சையில் சிக்க வைத்தது. இதனால் டெண்டுல்கரின் விளையாட்டு கவனம் சிதறும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. டெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கொடுத்ததுபோல் கங்குலிக்கும் எம்.பி. பதவி தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மல்லுக்கும் நின்றது.

விருதுகள்
ராஜிவ் கேல் ரத்னா, அர்ஜூனா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை டெண்டுல்கருக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











