கம்பீர் அபார சதம் - இந்தியா 332 ரன்கள் குவிப்பு
கொழும்பு: இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய கம்பீர் 150 ரன்களைக் குவித்தார். கேப்டன் டோணி 94 ரன்கள் எடுத்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது. முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்(503) எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டியில் விளையாட இருக்கிறது.
முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்று 4வது போட்டி நடந்தது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்துடன் சச்சின், ஜாகிருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ரோகித் சர்மா, இர்பான் பதான் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரராக வந்த ஷேவாக் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார்.
அடுத்து வந்த கேப்டன் டோணி, கம்பீருடன் சேர்ந்து சூப்பராக விளையாடினர். இவரது அதிரடி தடுத்து நிறுத்த முடியாமல் ஜெயவர்தனா ஆடிப் போனார்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தநிலையில் டோணி, ஜெயசூர்யா பந்தில் அவுட்டானார். 2 சிக்சர், 4 பவுண்டரி விளாசிய டோணி 94 ரன்களுக்கு அவுட்டானார். சதம் கடப்பார் என பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த போட்டியில் கலக்கிய யுவராஜ் இம்முறை 5 ரன்களுக்கு குலசேகரா பந்தில் நடையை கட்டினார். அதிரடி யூசுப் பதான் டக் அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கம்பீர் சதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரது 6வது சதமாகும். இவருக்கு துணையாக ரெய்னா ரன்கள் சேர்த்தார்.
கம்பீர் 114வது ரன் எடுத்த ஒரு நாள் போட்டியில் தனது புதிய அதிகபட்ச ஸ்கோரை எட்டினார். இவர் 1 சிக்சர், 14 பவுண்டரி உட்பட 150 ரன்கள் எடுத்து, முரளிதரன் பந்தில் அவுட்டானார்.
இந்த விக்கெட்டின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்(503) எடுத்த வீரர் என்ற சாதனையை முரளிதரன் படைத்தார். முன்னதாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 502 விக்கெட் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
ரெய்னா 49, ரோகித் 4 ரன்கள் எடுத்தனர். இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications