டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை கடைசி பந்தில் சென்னை அணி வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரில் 28 வது லீக் போட்டியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லியில் பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு மோதின.
தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியதால் சென்னை அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த அணியில் பார்த்தீவ் படேல், அனிருத், ஜோகிந்தர் ஷர்மா, நிடினி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் பாலாஜி மற்றும் வித்யுத், அமர்நாத், கபுகேதரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி முதல்முறையாக பீல்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக சேவாக்கும், கம்பீரும் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. சேவாக் 18 பந்துகளில் 3 பவுண்டரிகளை அடித்து 23 ரன்களை குவித்தார்.
கோனி வீசிய யார்க்கரில் சேவாக் போல்டானார். அடுத்துவந்த டிவில்லியர்ஸ் முதல்பந்திலேயே டக் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கம்பீரும், ஷிகர் தவானும் அதிரடியாக ஆடி 121 ரன்கள் குவித்தனர்.
சென்னை அணி பீல்டிங்கில் மிக மோசமாக இருந்தனர். இந்த ஜோடியை ரன் அவுட்டாக்கும் பல எளிய வாய்ப்புகளை கோட்டை விட்டனர். 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடித்து 80 ரன்களை எடுத்திருந்த கம்பீர் பாலாஜி பந்து வீச்சில் கபுகேதராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த தொடரில் 300 ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை கம்பீர் பெற்றார்.
தவான் 46 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 59 ரன்களை எடுத்து அவுட்டானார். அடு்த்து சோயுப் மாலிக் 2 ரன்களில் வெளியேற டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்திருந்தது.
தொடர்ந்து சென்னை சூப்பர்கிங்ஸின் ஸ்டீபன் பிளமிங்கும், வித்யுத்தும் முதல் விக்கெட் ஜோடிக்கு 62 ரன்கள் எடுத்தனர். வித்யுத் அதிரடியாக 23 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 40 ரன்களை எடுத்து அவுட்டானார்.
டோணியுடன் கூட்டு சேர்ந்த பிளமிங் 28 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி 44 ரன்கள் எடு்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த மோர்க்கெல் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து படைத்தார். ஒரே ஓவரில் ஹாட்ரி சிக்ஸர் தொடர்ந்து ஒரு பவுண்டரி என விளாசித் தள்ளியதால் அணியின் வெற்றி இலக்கு சுலபமானது. 15 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களை எடுத்திருந்த மோர்க்கெலை சேவாக் ரன் அவுட் செய்தார்.
அடுத்து டோணி 33 ரன்களிலும் கபுகேதரா 8 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.
இந்நிலையில் கடைசி ஓவரில் 15 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை சென்னை அணிக்கு ஏற்பட்டது. ரசிகர்கள் பரபரப்பு தாங்காமல் பயங்கர கூச்சல் எழுப்பினர். மாலிக் வீசிய முதல் பந்தை கோனி சிக்ஸர் அடித்தபோது ரசிகர்களின் உற்சாகத்தில் அரங்கம் அதிர்ந்தது.
அடுத்த பந்து வைடு. மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் கோனி அடுத்த பவுண்டரி அடித்ததும் ஆட்டம் நிதானமடைந்தது.
4 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலையில் 2 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் ரன் எடுக்க முடியாத நிலையில் ஆட்டம் சமநிலையில் இருந்தது. கடைசி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய நிலையில் பீல்டர்களை உள்வட்டத்துக்கு கொண்டு வந்து நெருக்கடியை ஏற்படுத்தினார் சேவாக்.
ஆனால் மாலிக் வீசிய கடைசி பந்தில் பத்ரிநாத் 2 ரன்களை எடுத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் பரபரப்பான வெற்றியை தழுவியது.
கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த சென்னை அணிக்கு இது ஓர் ஆறுதல் வெற்றியாகும்.