சென்னை: கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீகில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்குப் போட்டியாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்திய பிரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள சென்னை அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கபில் தேவ் தலைமையில் இயங்கி வரும் இந்திய கிரிக்கெட் லீக்குப் போட்டியாக இந்திய கிரிக்கெட் வாரியமும் களம் இறங்கியுள்ளது. இந்திய பிரீமியர் லீக் என்று பெயரிடப்பட்டுள்ள இதில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, மொஹாலி, பெங்களூர் என பல அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அணிகளை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏலத்தில் விட்டு பல நூறு கோடிகளை அள்ளியது.
சென்னை அணியை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. கொல்கத்தா அணியை ஷாருக்கானும், பெங்களூர் அணியை விஜய் மல்லையாவும், மும்பை அணியை முகேஷ் அம்பானியும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இந்தியா சிமென்ட்ஸ் அதிபர் சீனிவாசன்தான், இந்திய கிரிக்கெட்
வாரியத்தின் பொருளாளராகவும் இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
இன்று சென்னை அணி அறிமுகப்படுத்தப்பட்டது. அணிக்குப் புதிதாதக சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். உறுமும் சிங்கம் அதன் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
''Chennai Super Kings : Fearless Entertainers who will play to win'' என்பது அணியின் பன்ச் லைனாக உள்ளது.
இதுதொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய சீனிவாசன், அணியின் பிராண்ட் அம்பாசடராக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் செயல்படுவார்.
மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட்டைக் கொண்டு போக இது நல்ல வாய்ப்பு. இதுவரை கண்டுபிடிக்கப்படாத திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க முடியும்.
சென்னை மற்றும் அதன் 'கேட்ச்மென்ட்' பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் அணியில் இடம் பெறுவர். 'கேட்ச்மென்ட்' பகுதிகள் என்பது கேரளா, ரயில்வே என்று பொருளாகும்.
போட்டித் தொடரில் மொத்தம் 8 அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளில் ஆட வேண்டும். இதில் உள்ளூர் போட்டிகளும், வெளியில் சென்று மோதும் போட்டிகளும் அடக்கம்.
உள்ளூரில் நடக்கும், அதாவது சென்னையில் நடக்கும் போட்டிகள் அனைத்தும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவில் நடத்தப்படும். இரவு 8 மணி முதல் 11 மணி வரை போட்டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு அணியிலும் 22 வயதுக்குட்பட்ட வீரர்கள் நான்கு பேர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என இந்திய பிரிமீயர் லீக் விதிமுறை கூறுகிறது. மேலும், அந்தந்த அணி சார்ந்த பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் நான்கு பேர் இடம் பெற வேண்டும். அதன்படி சென்னை அணியிலும் வீரர்கள் இடம் பெறுவர்.
இந்த வார இறுதியில் வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். அப்போது சென்னை அணிக்கு நல்ல வீரர்கள் கிடைக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றார்.
ஸ்ரீகாந்த் பேசுகையில், இந்த 20-20 போட்டித் தொடருக்கான, சென்னை அணியின் பிராண்ட் அம்பாசடர் பதவிக்கு நான் முற்றிலும் பொருத்தமானவன். காரணம், நான் விளையாடிய காலத்தில், எந்தப் போட்டியிலும் 20 ஓவர்களுக்கு மேல் விளையாடியதே இல்லை 'டைமிங்'காக என்று கூறியபோது கூடியிருந்தவர்கள் 'கொல்' என்று சிரித்தனர்.
ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல்லின் 20-20 போட்டித் தொடர் தொடங்கவுள்ளது.