லண்டன்: டுவென்டி-20 உலக் கோப்பை தொடரின் நேற்றைய சூப்பர்-8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், அயர்லாந்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. நேற்று நடந்த சூப்பர்-8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதின். இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
இங்கிலாந்து அணிக்கு போபரா நல்ல துவக்கம் தந்தார். இவர் 55 ரன்கள் எடுத்தார். கேப்டன் பீட்டர்சன் 19 பந்தில் அதிரடியாக 31 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை நின்றதும் வெஸ்ட் இண்டீசுக்கு 9 ஓவரில் 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் 8.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதையடுத்து இப்பிரிவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இங்கிலாந்து வெளியேறியது.
மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதல்...
இன்று நடக்கும் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். மற்றொரு போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன.