
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள், புக்கிகள், பாலிவுட் நடிகர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட பலர் சிக்கி சிறைக்குப் போயுள்ளனர். ஆனால் இந்த பிக்ஸிங் விவகாரம் குறித்து இந்தியாவில் இருந்த வரை எந்த ஒரு பதிலுமே சென்னை அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமாகிய டோணி அளிக்கவில்லை. மீடியாவைக் கண்டாலே ஓடு ஓடு என ஓடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மினி உலகக் கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் டோணி பிர்மிங்காமில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பிக்ஸிங் விவகாரத்தில் இந்திய ஊடகங்களின் கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவது இல்லை. பதிலளிக்க ஒரு காரணமும் இல்லை. எதற்காக நான் உங்களுக்குப் பதில் அளிக்கனும்? சரியான நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் நிச்சயமாக பதில் அளிப்பேன்...சிலர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.. அவர்கள் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் ஒரே தராசில் வைத்து எடை போடுகின்றனர் என்றார் அவர்.