டர்பன: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் இன்றைய முக்கிய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதிக்கு எளிதாக முன்னேறலாம் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கம்.
ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இன்று நடக்கும் முக்கியமான இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கிறது. சென்னை அணி 15 புள்ளிகளுடனும், பஞ்சாப் அணி 14 புள்ளிகளுடனும் களமிறங்குகின்றன.
சென்னை அணிக்கு ஹைடன் தொடர்ந்து சூப்பர் துவக்கம் தந்து வருகிறார். கடந்த போட்டியில் விளையாடாத இவர் இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைதவிர்த்து ரெய்னா, டோணி ஆகியோரும் அருமையாக பேட் செய்து வருகின்றனர்.
பந்துவீச்சில் பாலாஜி, மோர்கல் நன்றாக விக்கெட் வீழ்த்தி வருகின்றனர். இருந்தாலும் பாலாஜி சில சமயங்களில் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிடுகிறார். அவர் விரைவில் தவறை திருத்தி கொள்ள வேண்டும். கஞ்சத்தனமாக பந்துவீசி வரும் முரளிதரன் இருப்பது சென்னை அணிக்கு பலம்.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்பதால் இரு அணிகளும் கடும் சவால் கொடுக்க காத்திருக்கின்றன. ஒரு வேளை சென்னை அணி இந்த போட்டியில் தோற்றுவிட்டால் மற்ற போட்டிகளின் முடிவு மற்றும் ரன் விகதம் ஆகியவற்றை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.