செஞ்சுரியன் பார்க்: டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் யூசுப் பதானின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியை சந்தித்தது.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷேவாக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரராக வந்த கம்பீர் 8 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இவரை தொடர்ந்து ஷேவாக்கும் வெளியேற, டெல்லிக்கு ஆரம்பமே அதி்ர்ச்சியாக அமைந்தது.
அடுத்து வந்த டிவிலியர்ஸ் பொறுப்புடன் விளையாடினார். ஆனால் இவருக்கு மற்ற வீரர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தில்ஷன் 7, தினேஷ் கார்த்திக் 4 ரன்களுக்கு அவுட்டானார்கள். இந்நிலையில் 1 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 40 பந்தில் 50 ரன்கள் எடுத்த டிவிலியர்ஸ், வார்ன் சுழலில் அவுட்டானார்.
வெட்டோரி 29, மன்ஹாஸ் 23 ஓரளவு ரன்கள் சேர்த்தனர். டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு குயினே 4 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மித் நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த அஸ்னோத்கர் (11), ரவிந்திர ஜடேஜா (16), வார்ன் (0) வரிசையாக வெளியேறினார்கள். இதையடு்த்து ராஜஸ்தான் அணி 11 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி கொண்டிருந்தது.
இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய யூசுப் பதான், டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வரிசையாக சிக்சர்கள் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார். அவர் 6 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 30 பந்தில் 60 ரன்கள் எடுத்து இறுதி ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த ஸ்மித் 46 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.