கோலியோட கேப்டன்சியில் ஒரு போட்டியிலாவது நான் விளையாடணும்..! இறுதி ஆசையை சொன்ன அந்த வீரர்.!!
மும்பை: தடை குறைக்கப்பட்டுள்ள நிலையில், கோலியின் கேப்டன்சியில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமது ஆசையை வெளியிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் விளையாட பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு ஆயுட்கால தடை விதித்தது.
தடையை கேரள உயர்நீதி மன்ற தனி நீதிபதி ரத்து செய்ய, அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

3 மாதங்களில் முடிவு
அந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்ரீசாந்தின் தண்டனை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் 3 மாத காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

7 ஆண்டுகள் மட்டுமே
இந்நிலையில் இதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஸ்ரீசாந்த் எந்தவொரு வணிக கிரிக்கெட்டிலும் பங்கேற்கவோ அல்லது பிசிசிஐ அல்லது அதன் துணை நிறுவனங்களின் எந்தவொரு நடவடிக்கைகளுடனும் தொடர்பு கொள்வதையோ விதித்திருந்த தடை 13.09.2013 முதல் அமல்படுத்தப் பட்ட 7 ஆண்டுகள் ஆகும்.

தடை மாற்றம்
அவரது வாழ்நாள் தடை 7 ஆண்டுகள் என இடைக்கால தடையாக மாற்றப் படுகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ( 07-08-2020) முதல் அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்களிலும் அவர் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீசாந்த் மகிழ்ச்சி
தடை முன் தேதியிட்டு குறைக்கப்பட்டது, பெரும் உலகில் திடீர் பரபரப்பானது. இது குறித்து ஸ்ரீசாந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தடை குறைப்பு ரொம்ப மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனது நலம் விரும்பிகள், எனக்காக பிரார்த்தனை செய்தோருக்கு நன்றிகள்.

100 விக்கெட்டுகள்
எனக்கு இப்போது வயது 36, தடை முடியும் போது 37 ஆகிவிடும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 87 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

கோலி கேப்டன்சி
இந்திய டெஸ்ட் அணிக்குள் மீண்டும் நான் திரும்ப முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலி கேப்டன்சியின் கீழ் ஆட வேண்டும் என்பது எப்போதுமே என் ஆசையாக இருந்து வந்துள்ளது என்றார்.

இந்திய அணியில் இருந்தவர்
ஸ்ரீசாந்த், 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications