
10 ரன்களைக் கூட
ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜேஸன் ராய், ரிதிமான் சாஹா களமிறங்கினர். ஏற்கனவே, பிளே ஆஃபை விட்டு வெளியேறிவிட்ட ஹைதராபாத் அணி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிதான் ஆடி வருகிறது. பாயிண்ட்ஸ் குறித்தோ, ரன் ரேட் குறித்தோ எந்த பிரஷரும் அந்த அணிக்கு இல்லை. ஆனாலும், அவர்களால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. சரி.. இனியாவது விட்டு விளாசும் என்று பார்த்தால், கொல்கத்தா அணிக்கு எதிராக முந்தைய கதையை தொடர் கதையாக்கி வருகிறது. வார்னருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஜேஸன் ராய், முதல் போட்டியில் அரைசதம் அடித்தாலும், அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் 10 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. இன்று அவர் 13 பந்துகளை சந்தித்து 10 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். ரிதிமான் சாஹா, சவூதி வீசிய முதல் ஓவரிலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனால் அந்த அணி 16 ரன்களுக்கெல்லாம் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

பலிக்காத முயற்சி
அதன்பிறகு, ஓரளவு செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்த கேன் வில்லியம்சன், 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாமல் ரன் அவுட்டாக, அவரது விக்கெட்டையும் இழந்தது. இதன் பிறகு ப்ரியம் கார்க் 21, அபிஷேக் ஷர்மா 6 ரன்களில் அவுட்டாக, அந்த அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் மட்டும் எடுத்தது, ஓப்பனிங், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என்று அந்த அணியின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. கடைசி நம்பிக்கையாக இருந்த ஜேஸன் ஹோல்டர் வெறும் 2 ரன்களில் காலியாக, ஹைதராபாத்தின் கனவு சுக்கு நூறானது. அப்துல் சமத் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

தொடரும் தோல்விகள்
இந்த 2021 ஐபிஎல் தொடரில், இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள 9 ஆட்டங்களில் தோற்றிருக்கிறது. 2 போட்டியில் தான் வெற்றிப் பெற்றுள்ளது. வெறும் 4 புள்ளிகளே கையில் உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு, அந்த அணியின் மிக மோசமான தொடராக இத்தொடர் அமைந்துள்ளது. வார்னர் தான் ஹைதராபாத் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்றுக் கொடுத்த ஒரே கேப்டன். ஆனால், அவர் இப்போது சுத்தமாக ஃபார்மில் இல்லை. அணியையும் அவரால் வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. இதனால் வார்னர் நீக்கப்பட்டு வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது தலைமையிலும் தோல்வி மட்டுமே மிஞ்சுகிறது.

கெய்க்வாட் எனும் முத்து
கேப்டன் பஞ்சாயத்து ஒருபக்கம் இருந்தாலும் அந்த அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என எதுவுமே பலமில்லாத ஆர்டராக உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து என்று சரியான விஷயம் தான். சந்தேகமே இல்லை. புதியவர்களிடம் "ஸ்பார்க்" இல்லை என்று ரசிகர்கள் கொண்டாடும் தோனி சொன்ன போது, அதே ரசிகர்கள் தோனியை முதன் முதலாக எதிர்த்தனர். அதன் பயனாக, இன்று சென்னை அணிக்கு கெய்க்வாட் எனும் முத்து கிடைத்துள்ளது. ஸோ, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என்பது வரவேற்கக் கூடிய ஒன்று தான். ஆனால், தொடர்ச்சியாக அவர்களால் சரியாக விளையாடும் போது, சில முகம் தெரிந்த வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மெகா அணியை இறக்க முடிவு
சன் ரைசர்ஸ் விளையாடுகிறது என்றாலே, அந்த போட்டிக்கு பதில் வேறு ஏதாவது ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சியை டிவியில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள் என்பதே உண்மை. இவற்றையெல்லாம், SRH அணியின் சன் குழுமம் தீவிரமாக கவனித்து வருகிறது. அடுத்த சீசனுக்கு மெகா ஏலம் நடைபெற இருப்பதால், பல அணிகள் பல புதிய வீரர்களை வாங்க இப்போதே தங்களது வல்லுநர்கள் மூலம் வியூகம் அமைத்து வருகிறது. இந்த சூழலில், சன் ரைசர்ஸ் நிர்வாகம் எதிர்வரும் ஏலத்தில், ஒரு மெகா அணியை களமிறக்குவது என்று முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதாவது, இத்தொடரில் இடம் பெற்றிருக்கும் பல வீரர்கள் அடுத்த ஏலத்தில் மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதில், சீனியர் வீரர்கள் பலரை குறி வைத்து களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 2022 ஐபிஎல் சீசனில் சூரியன் உதித்தே தீர வேண்டும் என்பதில் SRH நிர்வாகம் உறுதியாக உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











