"யார்க்கர் கிங்" நடராஜன் ரிட்டர்ன்ஸ்.. டெத் ஓவர்களில் வெறும் 6 ரன்கள்.. மிரண்டுபோன ரசிகர்கள்!
ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்து வரும் போட்டியில் 3 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜனின் பந்துவீச்சை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களான பட்லர் 54 ரன்களும், ஜெய்ஸ்வால் 54 ரன்களும், சஞ்சு சாம்சன் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பவர் பிளே ஓவர்கள் முடிவில் 85 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் குறைந்தது 230 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் ஒரு ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி உட்பட 17 ரன்களை பட்லர் விளாசினர். இதனால் காயத்திற்கு பின் நடராஜன் ஃபார்மில் இல்லையோ என்று ரசிகர்கள் எண்ணினார்கள்.
ஆனால் அதே நடராஜன் ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை டெத் ஓவரில் தடுத்து நிறுத்தினார். 17வது ஓவரில் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தியதோடு, வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். பின்னர் மீண்டும் 19வது ஓவரை வீச நடராஜன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி, மீண்டும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
டெத் ஓவரில் நடராஜனின் அபாரமான பந்துவீச்சால் ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பு குறைந்தது. 3 ஓவர்களை வீசிய நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் டெத் ஓவரில் நடராஜனின் பந்துவீச்சை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இது நடராஜன் ரிட்டர்ன்ஸ் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் நடராஜனை இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications