லக்னோ: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற 122 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணி தரப்பில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
16வது ஐபிஎல் சீசனுக்கான 10வது லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் லக்னோ அணி சார்பாக மார்க் வுட் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். அதேபோல் ஐதராபாத் அணி சார்பாக அபிஷேக் சர்மா நீக்கப்பட்டு அன்மோல்பிரீத் சிங் களமிறக்கப்பட்டார்.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - அன்மோல்பிரீத் சிங் களமிறங்கினர். லக்னோ பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், தொடக்க முதலே ஐதராபாத் அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 3வது ஓவரிலேயே க்ருனால் பாண்டியா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
இதன் பலனாக மயங்க் அகர்வால் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் த்ரிப்பாட்டி - அன்மோல்பிரீத் கூட்டணி இணைந்தது. இந்த இணை அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தியது. ஆனால் 8வது ஓவரை வீசிய க்ருனால் பாண்டியா ஓவரில் அன்மோல்பிரீத் 31 ரன்களிலும், கேப்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்ட புரூக் 3 ரன்களில் வெளியேறினார்.
இதனால் ஐதராபாத் அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் - த்ரிப்பாட்டி கூட்டணி சிறிது நேரம் போராடியது. பின்னர் த்ரிப்பாட்டியும் 35 ரன்களில் ஆட்டமிழக்க, சுந்தர் 28 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரில் அப்துல் சமத் 13 ரன்கள் சேர்த்தார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்த்தது. சவாலான இலக்கு நிர்ணயித்திருந்தாலும், லக்னோ அணியின் நீண்ட பேட்டிங் வரிசையை ஐதராபாத் அணி எப்படி கட்டுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.