ஐதராபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 20 வயதேயான சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி அறிமுகம் செய்த நிலையில், இன்று ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 17 வயதான மபாகாவை மும்பை அணி அறிமுகம் செய்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தரப்பில் 20 வயதேயான சமீர் ரிஸ்வி அறிமுகம் செய்யப்பட்டார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ரஷீத் கானை மிரள வைக்க, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அவரை பற்றிய விவாதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியை பின்தொடர்ந்து மும்பை அணியின் 17 வயது வீரரை அறிமுகம் செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரரான லூக் வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 17 வயதேயான இளம் வீரரான மபாகா அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
மும்பை அணி தரப்பில் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மபாகாவை மும்பை அணி ஒப்பந்தம் செய்தது. மும்பை அணியின் முன்னாள் வீரரான டுமினி, தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட்டை கூர்மையாக கவனித்து வருபவர்.

ஏற்கனவே யான்சன் சகோதரர்களை மும்பை அணிக்கு பரிந்துரைத்தவரும் டுமினி தான். இவரின் பரிந்துரையின் பெயரிலேயே மபாகாவையும் மும்பை அணி கொண்டு வந்தது. ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மபாகா. 17 வயதேயான இவர் யு19 உலகக்கோப்பை தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றவர்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர் 17 வயதிலேயே தென்னாப்பிரிக்கா ஏ அணிக்காக விளையாடி வருகிறார். அதேபோல் மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசக்கூடிய திறமையை கொண்டுள்ள இவர், டெத் ஓவர்களில் சிறந்த யார்க்கர் பந்துகளையும் வீசக் கூடியவர். இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.