கொல்கத்தா: கடந்த சில வாரங்களாக என்னை சமூக வலைதளங்களில் கசக்கி பிழிந்த இந்திய ரசிகர்களின் வாயை அடைத்ததன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பதாக ஐதராபாத் அணியின் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி, 228 ரன்கள் குவித்ததே காரணமாக அமைந்தது. அதில் ஐதராபாத் அணி சார்பாக இளம் வீரர் ஹாரி ப்ரூக் சதம் விளாசினார். 55 சதம் விளாசிய அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக், மூன்று போட்டிகளில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய ஆடுகளத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஹாரி ப்ரூக் திணறியது வெளிப்படையாக தெரிந்தது. இதனால் ரூ.13.25 கோடி கொடுத்து ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் வாங்கியதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றபின் ஹாரி ப்ரூக் பேசுகையில், மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியால் சில பரபரப்பு ஏற்பட்டிருந்தாலும், இறுதியாக எங்கள் அணி வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடுவதே சிறந்ததாக பலரும் கூறுவார்கள். நான் எந்த பேட்டிங் வரிசையில் விளையாட தயாராக இருக்கிறேன். 5ம் இடத்தில் களமிறங்கி அதிக வெற்றிகளை பெற்றிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் சதம் விளாசியதன் மூலம் எனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துவிட்டேன்.
இந்த சதத்தை விடவும் எனது 4 டெஸ்ட் சதங்கள் தான் சிறந்தது என்றே கருதுகிறேன். மைதானத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 3 போட்டிகளில் சிறப்பாக ஆடாததால் என்னை மீது நான் அழுத்தத்தை ஏற்படுத்தி கொண்டேன். சமூக வலைதளங்களில் என்னை குப்பை என்று பலரும் விமர்சித்தார்கள். இன்று இந்திய ரசிகர்கள் பலரும் எனது பேட்டிங்கை பார்த்து பாராட்டு தெரிவிக்கிறார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன் கசக்கி பிழிந்துவிட்டார்கள். அவர்களின் வாயை அடைத்ததால் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.