டாக்கா: ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஓவரில் வலது மற்றும் இடது கையால் பந்து வீசி அசத்தினார் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் கமிந்து மெண்டிஸ்.
ஜூனியர் உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 48.4 ஓவரில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஹசன் மோஸின் அதிகபட்சமாக 86 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இலங்கை அணி. அந்த அணியின் கமிந்து மெண்டிஸ் 68 ரன்னும், விக்கெட் கீப்பர் விஷாத் டி சில்வா 46 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் இலங்கை அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது வித்தியாசமான நிகழ்வு ஒன்று அரங்கேறியது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசும் திறமைப் படைத்தவர். இந்த போட்டியின்போது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை மூலமாகவும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையாலும் பந்து வீசி அசத்தினார். இவரது பந்து வீச்சை பார்த்த ரசிகர்கள் வியப்படைந்தனர்.