துபாய்: இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கே மற்றும் அணி மேலாளார் அசங்கா குருசின்கா ஆகியோருக்கு, நான்கு ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்திய காரணத்தால், ஐந்து ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, அடுத்த நாள் மைதானத்திற்குள் வராமல் இருந்தது இலங்கை அணி. இதனால், ஆட்டம் துவங்க இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர், இலங்கை அணி ஆட்டத்தில் பங்கேற்றாலும், ஐசிசி விதிகளை மீறிய கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கிடையே, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு எதிராக தினேஷ் சண்டிமால் அப்பீல் செய்தார். அதில், தினேஷ் சண்டிமால் ldquo;செயற்கையான பொருளை rdquo; பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனால், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆட்டத்தை தாமதப்படுத்திய குற்றம் தொடர்பாக விசாரணை தொடங்கியது. தற்போது, அதன் முடிவு ஐசிசி-யால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கே மற்றும் அணி மேலாளார் அசங்கா குருசின்கா ஆகியோர் ldquo;விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்பட்ட rdquo; (conduct contrary to the spirit of the game) குற்றத்திற்காக, எட்டு தடைப் புள்ளிகள் (suspension points) விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐசிசி விதிகள் படி அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் இவர்கள் மூவரும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது நடந்து வரும் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இவர்கள் மூவரும், தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.