இலங்கை வீரர்கள் மே 18-ம் தேதி வரை ஐபிஎல் விளையாடலாம்! - பணிந்தது இலங்கை

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கையின் 11 முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் கோடிக்கணக்கில் பணம் கட்டப்பட்டுள்ளது. மே 28-ம் தேதி வரை இவர்கள் இந்தியாவில் இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தனர். இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதை உறுதி செய்திருந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை அணி வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திடீரென்று, உத்தரவிட்டது.
எனினும் அவர்களை மேலும் சில நாட்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இலங்கை அரசோ, எங்களுக்கு இலங்கையின் கிரிக்கெட் நலன்கள்தான் முக்கியம். ஐபிஎல் குறித்து நாங்கள் கவலைப்பட முடியாது என்று கூறிவிட்டது.
இலங்கையின் இந்த செயல் முறையற்றது என பிசிசிஐ கோபத்துடன் கூறியது.
இந்த நிலையில் திடீரென இலங்கை அரசும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் இறங்கி வந்துள்ளன.
"மே 10-ம் தேதி வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட வேண்டும். அதை ஒத்திவைக்கவும் பரிசீலிப்போம். பிசிசிஐக்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது. அது தொடர விரும்புகிறோம். வீரர்களுக்கு புதிய தேதியை அறிவிக்க முயற்சி செய்து வருகிறோம்" என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் வரும் மே 18-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் விளையாடலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கங்குலியின் நம்பிக்கை தகர்ந்தது
இலங்கையின் இந்த முடிவால் யாருக்கு வருத்தமோ இல்லையோ, நிச்சயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பெரும் ஏமாற்றமாக இருந்திருக்கும்.
இலங்கை வீரர்கள் முன்கூட்டியே நாடு திரும்பும் பட்சத்தில் கொச்சி டஸ்கர்ஸ் அணியின் தலைவராக இவர்தான் நியமிக்கப்பட இருந்தார். ஆனால் இலங்கை தனது முடிவை மாற்றிக் கொண்டதால், மீண்டும் பெவிலியனிலிருந்து ஐபிஎல்லை வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கங்குலி.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications