மும்பை: 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணியும் தகுதி பெற்றுள்ளது. கடும் போட்டியில் இருந்த வெஸ்ட் இன்டீஸ் அணி, இனி தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2019ல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தீவுகளில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியா,வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து,பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 7 அணிகள் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
நேரடியாக விளையாடப் போகும், 8வது அணி எது என்பதற்கான போட்டியில், இலங்கையும், வெஸ்ட் இன்டீஸ் அணியும் இருந்தது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் அடைந்த தோல்வியால், நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை இழந்தது. அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இன்டீஸ் அணியின் செயல்பாடுதான், உலகக் கோப்பைக்கு நேரடியாக நுழையும் அணியை உறுதி செய்வதாக இருந்தது.
செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி இந்த இரண்டில் எது அதிக புள்ளிகள் பெற்றுள்ளதோ அதுவே நுழையும் நிலை இருந்தது. தற்போதைய நிலையில் இலங்கை, 86 புள்ளிகளுடன் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருதினப் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் தோல்வியடைந்தது. தற்போது 78 புள்ளிகளுடன் உள்ள வெஸ்ட் இன்டீஸ் இனி கர்ணம் போட்டாலும் புள்ளிகளைப் பெற முடியாது. இதனால் இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2018ல் நடக்கும் உலகக் கோப்பை தகுதி சுற்றின் அடிப்படையிலேயே வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு இனி வாய்ப்பு உள்ளது. தகுதி சுற்று ஆட்டத்தில், ஐசிசி தரவரிசையில் கடைசி மூன்று இடங்களில் உள்ள ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுடன், ஐசிசி உலக லீக் சாம்பியன் போட்டியில் முதல் நான்கு இடங்கள் உள்ள அணிகளும், ஐசிசி உலக லீக் டிவிஷன் 2ல் உள்ள முதல் இரண்டு அணிகளுடன், வெஸ்ட் இன்டீஸ் விளையாட வேண்டும்.