சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை விட மனம் இல்லாத சீனிவாசன், அதற்கு இடையூறாக உருவெடுத்துள்ள ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்று விட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மேட்ச்பிக்ஸிங்கில் சீனிவாசனுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரிய பதவி அல்லது ஐபிஎல் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் சீனிவாசன் தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறி விட்டது. மேலும் ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருக்கும்வரை சீனிவாசன் வாரிய பதவிக்குப் போட்டியிடவும் அது தடை விதித்து விட்டது.
இதனால் சீனிவாசன் தரப்பு குழப்பமடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் சீனிவாசன் இருக்கிறார். இதுதான் தற்போது அவருக்கு பெரும் சிக்கலாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை காக்க தனது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனப் பதவியை அவர் விட வாய்ப்பில்லை, அதை அவர் செய்யவும் மாட்டார். அதேசமயம், கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை விடவும் அவருக்கு மனம் இல்லை. இதனால் அவர் புது முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்க அவர் முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இன்னும் 6 வாரத்திற்குள் வாரியத் தலைவர் பதவியை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அதில் போட்டியிடுவதற்கு வசதியாக எவ்வளவு விரைவாக முடியுமோ, அந்த அளவுக்கு வேகமாக சென்னை அணியை சீனிவாசன் விற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம், சீனிவாசன் அணியை விற்றாலும் கூட அவருக்கு நெருக்கமான யாராவது ஒருவரே அணியை வாங்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.