கொல்கத்தா: கேகேஆர் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் சுயாஷ் சர்மா. 19 வயதாகும் சுயாஷ் சர்மா ஆட்டத்தை எந்த சூழல்களிலும், எந்த ஓவரையும் அச்சமின்றி வீசுகிறார். கூக்ளி பந்துகளை நல்ல வேகத்தில் வீசுவதால் சுயாஷ் சர்மாவின் பந்துவீச்சை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எந்த சவால்களையும் துணிந்து ஏற்கும் சுயாஷ் சர்மாவுக்கு சவால்கள் ஒன்றும் புதிதல்ல.
ஏனென்றால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சுயாஷ் சர்மா வீட்டின் கடைக்குட்டி. பேட்ஸ்மேனாக வேண்டும் என்ற கனவில் இருந்தவருக்கு, பொருளாதார சிக்கலால் பந்தை கைகளில் எடுக்கிறார். தந்தைக்கு புற்றுநோய் என்பதால், குடும்பத்தை அண்ணனும் அக்காவும் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறி தீவிரமாகிறது.

ஒரு கட்டத்தில் திறமையால் டெல்லி அணியின் 25 வயது வீரர்களுக்கான அணியில் இடம்பிடிக்கிறார் சுயாஷ் சர்மா. அங்கிருந்து யு19 இந்திய அணியில் இடம்பிடிக்க தீவிரமாக போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் யு-19 இந்திய அணிக்கான ட்ரெய்ல்ஸ்-ல் கலந்துகொண்டுள்ளார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு, நிச்சயம் இந்திய யு19 அணியில் இடம்கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
யு19 இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களின் விவரம் நடு ராத்திரியில் அறிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தூங்கி எழுந்த சுயாஷ் சர்மா, இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லாததால் மனம் உடைந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக அழுகிறார். ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தால், தலையில் மொட்டையடித்து கொள்கிறார்.
அதன்பின்னர் மீண்டும் கிரிக்கெட்டை தொடர்ந்து வந்த அவருக்கு, கேகேஆர் நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. கொல்கத்தா ட்ரெய்ல்ஸில் பங்கேற்ற அவரின் திறமையை சந்திரகாண்ட் பண்டிட் கண்டுபிடிக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சுயாஷ் சர்மாவின் போராட்டக் குணம் அவருக்கு பிடித்து போகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் அவரை ஏலத்தில் எடுப்பது பற்றி எந்த தகவலும் அவருக்கு கூறப்படவில்லை.
இதையடுத்து பல்வேறு அணிகளுக்காகவும் அவர் ட்ரெய்ல்ஸில் பங்கேற்று வருகிறார். எங்குமே பெரிதாக எந்த பதிலும் சொல்லப்படவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நாளிலும் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். விமான நிலையத்தில் வந்து களமிறங்கிய சுயாஷ் சர்மாவை அவரது தந்தை நேரில் வந்து கண்ணீருடன் வரவேற்றுள்ளார்.

அதன்பின்னர் தான் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதற்கு சுயாஷ் சர்மா ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நிமிடத்தில் இருந்து சுயாஷ் சர்மாவின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சுயாஷ் சர்மா 10 விக்கெட்டுகளை 8 எகனாமியில் வீசியுள்ளது தான் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடராஜன், ஜெய்ஸ்வால் என்று பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களும் அசாதாரண போராட்டத்தால் ஐபிஎல் தொடர் மூலம் உயர் நிலையை அடைந்துள்ளனர். அந்த வகையில் சுயாஷ் சர்மாவும் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் திறமையால் நேரடியாக ஐபிஎல் நேரடியாக களமிறங்கி பல இளம் வீரர்களுக்கும் உதாரணமாக மாறியுள்ளார் சுயாஷ் சர்மா.