"சாம்சனை நீக்கணும்னு சொல்லலை ஆனா வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுங்க".. பத்ரிநாத் பேச்சு
சென்னை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சஞ்சு சாம்சன் தொடர்ந்து ரன் குவிக்கத் தடுமாறி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், வைபவ் சூர்யவன்ஷிக்கு உடனடியாக இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதுகுறித்து பேசிய பத்ரிநாத், "ஒரு வீரர் தனது வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் இருக்கும்போதே அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஃபார்மில் இல்லாதபோது அவரை விளையாட வைப்பதில் எந்த பயனும் இல்லை. சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தொடர்ந்து சொதப்பி வருகிறார். அயர்லாந்து தொடரில் இருந்தே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரது இடத்தை நீக்க வேண்டும் என்று நான் நேரடியாகக் கூறவில்லை, ஆனால் வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு வீரர் சிறந்த ஃபார்முடன் வெளியே அமர்ந்திருக்கும்போது அணி நிர்வாகம் சாம்சனின் இடம் குறித்து யோசிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 16 போட்டிகளில் 48.50 சராசரியுடன் 237-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். ஆனால், அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டதற்கு வைபவ் சூர்யவன்ஷி போன்ற அதிரடி வீரர்கள் இல்லாததே காரணம் என்றும் பத்ரிநாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையில் 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், அதன் பிறகு விளையாடிய 3 இன்னிங்ஸ்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 189/7 ரன்கள் எடுத்தது. அந்தப் போட்டியிலும் அவர் 1 ரன் மட்டுமே எடுத்தார். இந்நிலையில், ஜூலை 4 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 2-வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
