அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் குஜராத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளை அகமதாபாத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்காக சுமார் ஒரு லட்சம் டிக்கெட் விற்கப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக பல முன்னேற்பாடுகள் பணி நடைபெற்றது.
இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத்தில் இறுதி கட்ட பயிற்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று அகமதாபாத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத மைதான ஊழியர்கள். அவசரமாக மைதானத்தை தார்ப்பாய் மூலம் மூடினார்கள்.

அகமதாபாத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதால் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை கொட்டியது. சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் வீரர்களின் பயிற்சி முகாம் பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாளையும் இதே போல் மழை பெய்தால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஆகி விடும்.
மேலும் ஐபிஎல் தொடருக்காக பல கோடி ரூபாய் செலவில் தொடக்க விழா உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்க விழாவும் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எனினும் போட்டி நடைபெறும் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மழை பெய்தால் அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும். மேலும் போட்டியிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.மழை பெய்யுமா? பெய்யாதா? என்ற தயக்கத்திலே டாஸ் வென்றால் என்ன செய்வது என்ற குழப்பம் கேப்டன்கள் மத்தியில் இருக்கும்.
மேலும் ஆடுகளத்தின் தன்மையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். அகமதாபாத் ஆடுகளத்தை பொருத்தவரை ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற் பந்துவீச்சாளர்களும் தங்களுடைய திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆடுகளம் இருக்கும் இங்கு கடைசியாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இரு அணிகளும் ரன்குவிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.