மும்பை : இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்துள்ளார். 39 வயதாகும் சுனில் சேத்ரி, ஜூன் 6ஆம் தேதி நடக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு பிரபல கிளப் அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியுடன் தனது கால்பந்து பயணத்தை தொடங்கினார் சுனில் சேத்ரி.

அதன்பின் 2005ஆம் ஆண்டு சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அறிமுகமான நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்தார். அப்போது முதல் இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, மொத்தமாக 94 கோல்களை விளாசி இருக்கிறார்.
இதன் மூலம் உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் சுனில் சேத்ரி இருக்கிறார். இவருக்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். அதேபோல் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி விசார்ட்ஸ், போர்ச்சுகல் ஸ்போர்ட்டிங் சிபி ரிசர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். அதேபோல் இந்தியாவில் ஈஸ்ட் பெங்கால், பெண்டோ, மும்பை சிட்டி எஃப்.சி, பெங்களூரு எஃப்.சி உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
ஓய்வு குறித்து சுனில் சேத்ரி வெளியிட்டுள்ள வீடியோவில், எனது கடைசி போட்டியில் விளையாட போகிறேன் என்று முடிவு செய்த பின், எனது குடும்பத்தினரிடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டேன். அப்போது என் தந்தை சாதாரணமாக எடுத்து கொண்டார். சொல்லப்போனால் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் எனது மனைவியிடம், ஒவ்வொரு முறையும் போட்டி முடிவடைந்த பின் கட்டிப்பிடித்து அன்பை பகிர்ந்து கொள்வேன். அப்போதெல்லாம் அதிகமான அழுத்தம் இருக்கும்.
இப்போது இனி நாட்டுக்காக எந்த போட்டியிலும் விளையாடப் போவதில்லை என்று கூறினேன். அப்போது என் மனைவி கண்ணீர் சிந்தினார். ஏன் கண்ணீர் வந்தது என்று அவர்களுக்கே தெரியவில்லை. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக நீண்ட ஆலோசனை எனக்குள் செய்து கொண்டேன். அதன்பின்னரே ஓய்வு முடிவுக்கு வந்தேன். இந்த முடிவுக்காக சோகமடைவேனா என்றால், நிச்சயம் சோகமடைவேன். ஒவ்வொரு நாளும் இதற்காக வருத்தப்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.