அந்த சின்ன விஷயத்தை சரிசெய்தால் போதும்.. சூர்யகுமார் யாதவின் பிரச்சினை என்ன.. கவாஸ்கர் அட்வைஸ்!
மும்பை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருவதால் அதிக விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில், அவரின் உண்மையான பிரச்சினை குறித்து கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி கண்ட சூழலில் 2வது போட்டியில் படு மோசமான தோல்வியை தழுவியது. இதனால் 1 - 1 என சமநிலையில் உள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களுக்குள் 117 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி கண்டது.

சூர்யகுமார் சொதப்பல்
இந்தியாவின் சொதப்பல் பேட்டிங்கில் அதிக கவனம் ஈர்த்துள்ளவர் சூர்யகுமார் யாதவ் தான். டி20 கிரிக்கெட்டில் நம்.1 பேட்டராக இருக்கும் அவர் இன்னும் 50 ஓவர் வடிவ கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகியுள்ளார். அதுவும் மிட்செல் ஸ்டார்க்கின் ஓவரில் ஒரே மாதிரி எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இனி சூர்யகுமாரை டி20க்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

கவாஸ்கரின் அட்வைஸ்
இந்நிலையில் கவாஸ்கர் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சூர்யகுமார் யாதவ் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு சரிவரமாட்டார் என்பது நிஜம் அல்ல. அவரிடம் சில டெக்னிக் பிரச்சினைகள் உள்ளன. அதனை சரிசெய்தாலே சிறப்பான ஃபார்முக்கு வருவார். முதல் விஷயம் சூர்யகுமாரின் ஸ்டான்ஸ் தான். அவர் 3 ஸ்டம்புகளையும் காட்டிக்கொண்டு ஓப்பனாக நிற்கிறார். இது டி20 கிரிக்கெட்டிற்கு இருக்க வேண்டிய ஸ்டான்ஸ். ஆனால் இந்த வடிவத்தில் சரிவராது.

காரணம் என்ன
டி20 கிரிக்கெட்டில் ஓபன் ஸ்டான்ஸில் இருக்கும் போது பிட்ச்சாகி வரும் பந்தினை ஃப்ளிக் ஷாட் மூலம் சிக்ஸருக்கு விரட்ட முடியும். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் பந்து ஸ்ட்ரைட்டாக வராது. திடீரென பந்து உள்பக்கமாக திரும்பிவிட்டால், எதையும் செய்ய முடியாமல் அவுட்டாகி செல்ல வேண்டியது தான். எனவே பேட்டிங் பயிற்சியாளருடன் சூர்யகுமார் யாதவ் ஆலோசனை நடத்த வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

புள்ளிவிவரம்
சர்வதேச அளவில் இதுவரை 20 ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 433 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி வெறும் 25.47 ரன்கள் மட்டுமே ஆகும். 2 அரைசதங்களை அடித்திருக்கிறார். அதுவும் கடந்தாண்டு அடித்தவை ஆகும். எனவே அடுத்து வரும் சென்னை போட்டியிலாவது சூர்யகுமார் கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications